ராகுவும், திருமணத்தில் ராகு ஏற்படுத்தும் தாக்கங்களும் (தொடர்ச்சி)

கடந்த பிப்ரவரி 23-ம் தேதி கட்டுரையில் ராகு லக்கினத்திலிருந்தால்..
ராகுவும், திருமணத்தில் ராகு ஏற்படுத்தும் தாக்கங்களும் (தொடர்ச்சி)

கடந்த பிப்ரவரி 23-ம் தேதி கட்டுரையில் ராகு லக்கினத்திலிருந்தால் என்ன பலனை தருவார் என பார்த்தோம். மற்ற வீடுகளில் இருந்தால் என்னென்ன பலன்கள் என்பதனை இந்த கட்டுரையில் பார்ப்பதோடு, திருமண வாழ்விற்கு பின் கெடுதல் நடவா வண்ணம் நாம் செய்ய வேண்டிய பரிகாரங்களைப் பற்றியும் காணலாம்.

ராகுவானவர் ஒருவரின் ஜனன ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் இருப்பார் எனில் அல்லது இரண்டாம் அதிபதிக்கு வெகு அருகாமையில் இருப்பார் எனில் அதாவது மிக நெருக்கமாக (குறைந்த பாகை இடைவெளியில்) , அந்த ஜாதகர், அவரின் குடும்பத்தைப் பெருக்குவார் என கொள்ளவேண்டும். குடும்பத்தைப் பெருக்குவார். அதாவது,

(1) அவர் பெற்றோரை (தாய் தந்தையரை) தனியாக ஒரு வீட்டிலும், இவரும் மனைவி குழந்தைகள் தனியாக இன்னொரு வீட்டிலும் வைத்து இருப்பது அல்லது

(2) சட்டத்துக்கு புறம்பாக இன்னொரு மனைவி / பல மனைவிகளை கொண்டு தனித்தனியே குடும்பத்தை நடத்துவது அல்லது (3) மொத்தமாக இவரின் குடும்பத்தை விட்டு வெளியேறி இன்னொரு தனி குடும்பத்தை ஏற்படுத்தி வாழ்வது.

இவற்றை எல்லாம் மனதில் கொண்டு திருமணத்திற்கு முன்பே, திருமணத்திற்குக் காத்திருக்கும் ஆண், பெண் இருபாலரின் பெற்றோர்கள், இருவரின் ஜாதகத்தையும் அலசி  ஆராய்ந்து பின்னர் முடிவுக்கு வரவேண்டும். இப்போது எல்லாம் ஜாதக பொருத்தம் பார்க்க வருபவர்கள் / பெற்றோர்கள், ஜோதிடர்களிடம் உடனே பார்த்து சொல்லவேண்டும் என கருதுகிறார்கள். அவர்களின் தேவை கழுத்து, வயிறு போன்ற நட்சத்திர பொருத்தம் மட்டும் போதும் என கருதுகிறார்கள். ஆனால், திருமணத்திற்கு அடுத்து சில மாதங்களிலேயே புதுமண தம்பதியினரிடையே, கசப்பு உணர்வு ஏற்பட்டு பிரிவினைக்குத் தயார் செய்து கொள்கிறார்கள்.

நட்சத்திர பொருத்தம் (10 பொருத்தம்) மட்டுமே அன்றி செவ்வாய் தோஷ பொருத்தத்தை, லக்கினத்திலிருந்தும், ராசியிலிருந்தும் மற்றும் சுக்கிரனிலிருந்தும் காணுதல் அவசியம். மேலும் இருவரின் ஆபத்தான தசை சந்திப்பு ஏதேனும் உள்ளதா என்றும், இந்த கால உணவு மற்றும் சமூக பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப யோனிப் பொருத்தம் திருப்திகரம் என்று மட்டும் இல்லாமல் சரியாக / உத்தமமாக இருப்பதும், திருமணத்திற்குப் பின் வரும் பிரச்னைகளுக்கு, நிச்சயமாக விடை காண வேண்டி உள்ளது. 

அனைத்திற்கும் மேலாக அவர்களுக்கிடையேயான தோஷ சாம்யம் எனும் பாவ சாம்யம் காணுதல் மிக நல்லது. இதுவே தம்பதியிடையேயான பிரிவினையைப் பற்றி மிக தெளிவாக கூறும் ஒரு ஜோதிடத்தில் ஒரு கணிப்பு முறை, என்பதனை உணர்ந்து பெற்றோர்கள் செயல்படவேண்டும். சாதாரண நக்ஷத்திர பொருத்தங்களுக்கான கட்டணத்தை விட இதற்கு சற்றே கூடுதலாக இருப்பினும் தங்கள் குழந்தைகளின் மேல் அக்கறை உள்ள அனைத்து பெற்றோர்களும் தாங்கள் பார்க்கும் ஜோதிடரிடத்தில் வற்புறுத்தி தோஷ சாம்யம் எனும் பாவ சாம்யம் காணுதல் நன்று.

மேலும், லக்கினத்திற்கும், ராசிக்கும் இருவருக்கிடையே ஆன, ஷஷ்ட்டாகமாக வராமல் இருந்தால் மிக நல்லது. கூடவே இருவரில் யாருக்காவது விதவாதோஷம், புணர்ப்பு தோஷம், பித்ரு தோஷம், ப்ரம்மஹத்தி தோஷம், சர்ப தோஷம் போன்றவை உள்ளதா என ஆராய்ந்து அதற்கேற்ற பரிகாரங்களைச் செய்து முடித்து, மேற்கொண்டு திருமணத்திற்கு முடிவெடுப்பதோ, நாள் குறிப்பதோ செய்யலாம்.

ராகுவானவர் ஒருவரின் ஜனன ஜாதகத்தில் மூன்றாம் வீட்டில் இருப்பார் எனில் அல்லது மூன்றாம் அதிபதிக்கு வெகு அருகாமையில் இருப்பார் எனில் அதாவது மிக நெருக்கமாக (குறைந்த பாகை இடைவெளியில்) அந்த ஜாதகருக்கு மனதிலும், உடலிலும் பால் உணர்வை பல காலத்துக்கு தூண்ட செய்யும். ஜாதகர், பலரிடம் நட்பு பாராட்டுபவராக மற்றும் நட்பை பராமரிப்பவராகவும் இருப்பார். மேலும் அந்த ஜாதகர், நேர்மறையாகவும், சர்ச்சைக்குரிய முறையிலும் ஊசலாடும் வேகமான மன நிலையைக் கொண்டிருப்பார்.  

நான் இங்குக் குறிப்பிடுபவை யாவும், பொதுவான பலன்களே. அதுவே, இயற்கை பாவர்களுடன் (செவ்வாய், சூரியன், தேய்பிறை சந்திரன், சனி) மற்றும் ஜனன ஜாதகத்தினால் ஏற்படும் பாவர்களுடன் சேரும் போது மேற்கூறியவை நிச்சயம் ஏற்படுவதோடு சற்றே கடுமையாகவும் மாறலாம். அதே சமயம், இயற்கை சுபர்களின் (புதன், குரு, சுக்கிரன்) மற்றும் ஜனன ஜாதகத்தினால் ஏற்படும் சுவர்களின் தொடர்பு (பார்வை, சாரம், இணைவு போன்றவையால்) அசுப பலன்கள் குறைவதோடு நன்மை அதிகரிக்கும். இந்த பலன்களை, தங்களுக்கு அருகில் உள்ள அனுபவமிக்க ஜோதிடர்களோடு உங்கள் சந்தேகங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

ராகுவானவர் ஒருவரின் ஜனன ஜாதகத்தில் நான்காம் வீட்டில் இருப்பார் எனில் அல்லது நான்காம் அதிபதிக்கு வெகு அருகாமையில் இருப்பார் எனில் அதாவது மிக நெருக்கமாக (குறைந்த பாகை இடைவெளியில்); அந்த ஜாதகர் தன்னிடம் இருக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துக்களைக் கொண்டு திருப்தி அடையாமல், சட்ட ரீதியாகவோ அல்லது சட்டத்துக்குப் புறம்பாகவோ சொத்துக்களையும், வாழ்க்கைப் பாணியையும்  (LIFE STYLE) பெருக்குவார்கள். அது அவரின் ஜனன ஜாதகத்தைக்கொண்டு அமையும். ஜாதகர் தனது வாழ்நாளில் அனைத்து வகையான வாழ்க்கைப் பாணியையும் / முறைகளையும் அவர் அனுபவிக்க அந்த ராகுவானவர் செய்துவிடுவார். அதாவது, படிப்பு / விளையாட்டு / பகட்டான / ஆபத்தான / இழிந்த / ஆன்மிகம் தழுவிய போன்ற அனைத்து சூழல்களையும் ஜாதகர் அறிய செய்திடுவார். 

ராகுவானவர் ஒருவரின் ஜனன ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டில் இருப்பார் எனில் அல்லது ஐந்தாம் அதிபதிக்கு வெகு அருகாமையில் இருப்பார் எனில் அதாவது மிக நெருக்கமாக (குறைந்த பாகை இடைவெளியில்); அந்த ஜாதகர் அனைத்துவித கல்வி கற்பதில், திறமைகளை வளர்ப்பதில், ஜாதகரை அறியச் செய்வார். ஒன்று ஜாதகருக்கு அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் இருக்கும் அல்லது அதற்க்கான முயற்சியில் ஈடுபடுவார்.

புதுப்புது வேலைகளுக்கு மாறிக்கொண்டே இருப்பார் அல்லது பல வேலைகளைச் செய்வார் / முயலுவார் அல்லது பலவேலைகளை ஒரே நேரத்தில் செய்வார். எதிர்காலத்தில், உடனடியாக மகிழ்ச்சி பெறும் நோக்கத்திற்காக லாட்டரி, சூதாட்டம் போன்றவைகளில் ஜாதகர், ஈடுபடுவார்.  

ராகுவானவர் ஒருவரின் ஜனன ஜாதகத்தில் ஆறாம் வீட்டில் இருப்பார் எனில் அல்லது ஆறாம் அதிபதிக்கு வெகு அருகாமையில் இருப்பார் எனில் அதாவது மிக நெருக்கமாக (குறைந்த பாகை இடைவெளியில்); அந்த ஜாதகர் அடிக்கடி கடன் வாங்குவார் அல்லது கடன் பட வேண்டி சூழலை உருவாக்குவார். வெகு சீக்கிரத்தில் கடன் அளவு ஏறுவதை ஜாதகர் காண வேண்டி வரும். உடலில் உள்ள நாள்பட்ட வியாதிகள் / நோய்கள் தீவிரப்படும்.

அதிகப்படியான எதிரிகளை ஜாதகர் தமது வாழ்வில் சந்திக்க வேண்டி வரலாம். மேற்படிக் கூறியவை யாவையும் லக்கினத்திலிருந்தும், ராசியிலிருந்து காணுதல் நன்று. 

அவ்வாறு காணும்போது ராகுவின் தாக்கம் பல்வேறு நிலைகளில் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். 

ராகுவின் தீவிரம் காட்டும் காரணிகள் (சில உதாரணத்திற்கு)

1. ராகு சுய சாரம் பெற்று அவர் இருக்கும் வீட்டு அதிபதியுடன் இருத்தல்.

2. ராகுவும் அவர் இருக்கும் வீட்டு அதிபதியும் ஒரே நட்சத்திரத்தில் அமர்ந்திருப்பது.

3. வேறு ஒரு கிரகத்தோடு இணையும் போது  அதன் பாகைகள் + / -  03.20 இடைவெளிக்குள் இருப்பது.

4. மேலும், ராகுவுடன் இணைந்த கிரகம், எப்போதெல்லாம் திருவாதிரை, சுவாதி, சதயம் போன்ற நட்சத்திரங்களைக் கடக்கும்போதெல்லாம் மேற்கூறியவைகளின் தாக்கம் அதிகரிக்கும். 

மேற்கூறியவை யாவும் ஜோதிடத்தைப் பற்றி பாமரரும் (ஜோதிட அறிவு பெறாதவரும்) அறியும் வண்ணம் அளிக்கப்பட்டுள்ளது. சரியான பிறப்பு குறிப்புகளான பிறந்த தேதி / மாதம்/ வருடம்/ நேரம் இவைகளுடன் பிறந்த ஊரையும் தெரிந்து இருப்பின் அருகில் உள்ள அனுபவமிக்க ஜோதிடர்களை நாடி தெளிவு பெறுமாறு கோரப்படுகிறது. 

மீதமுள்ள 6 இடங்களில் ராகு இருந்தால் என்னென்ன பலன்களைத் தருவார் என்பதனையும் சரியான பரிகார விளக்கங்களையும் அடுத்து வரும் கட்டுரைகளில் காணலாம்.

- ஜோதிட ரத்னா தையூர்.சி.வே. லோகநாதன்

தொடர்புக்கு - 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com