நாம் வழக்கமாக, கையில் வீணை இருந்தால் சரஸ்வதி என உருவகப்படுத்திக்கொண்டுள்ளோம்.
ஆனால் சரஸ்வதியின் வடிவத்தை தேவி மகாத்மியம் இவ்வாறு கூறுகிறது: ‘‘அசுரர்களை அழிக்க அம்பிகை எடுத்த உருவம் அது. ஆனால், தன் குழந்தைகளுக்கு ஞானப்பால் ஊட்ட திருவுள்ளம் கொண்டதால் அமைதியே சொரூபமாக கொண்டாள்.
வெள்ளுடை தரித்து, வெண்தாமரையில் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அன்னை, இடக் கீழ்க் கையில் புத்தகமும், வலக் கீழ்க்கையில் சின் முத்திரையும், வல மேல் கையில் அட்சர மாலையும், இட மேல் கையில் அமிர்த கலசமும் தாங்கி ஜடாமுடியுடன், துடி இடையும், கருணை புரியும் இரு விழிகளும், ஞானசக்ஷுஸ் (ஞானசக் ஷூஸ்) என்ற மூன்றாவது கண்ணும், புன்னகை தவழும் திருவாயுமாய் கிழக்கு முகமாக வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றாள். அன்னையின் ஒவ்வொரு அம்சமும் ஒவ்வொரு தத்துவத்தை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது.
இந்த அரிய கோலத்தில் சரஸ்வதியை காண நீங்கள் செல்ல வேண்டிய திருத்தலம் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் – காடுவெட்டி சாலையிலுள்ள திருக்களப்பூர் சிவன்கோயில்.
இறைவன் கருவறை வாயிலில் அமர்ந்திருக்கும் சரஸ்வதிக்கு கையில் வீணையில்லாமல் வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்க காத்திருக்கிறார்.
இவரை மாணவர்கள் தான் தொழவேண்டும் என்பதில்லை, ஆசிரியர்கள், கணக்காயர்கள், பாடகர்கள், நினைவுதிறன் குறைவுடையோர், வேதம் ஓதும் அந்தணர்கள், ஜோதிடர்கள் ஆகியோரும் வணங்க வேண்டிய அற்புத சிலாரூபிணி.