திருமண சுபமுகூர்த்தம் குறிக்கத் தெரிந்துகொள்ள வேண்டியவை!

ஒரு திருமணம் நடப்பது என்பது கடவுள் பிராப்தம் என்றால் அதைவிட முக்கியம் சரியான சுபமுகூர்த்த..
திருமண சுபமுகூர்த்தம் குறிக்கத் தெரிந்துகொள்ள வேண்டியவை!


ஒரு திருமணம் நடப்பது என்பது கடவுள் பிராப்தம் என்றால் அதைவிட முக்கியம் சரியான சுபமுகூர்த்த வேளையில், மும்மூர்த்திகள், தேவர்கள், முன்னோர்கள் மற்றும் சுற்றம் சூழ சாட்சியாகக் கொண்டு, மணமகன் மணமகளின் திருமாங்கல்ய சரடை (மாங்கல்ய தாரணம்) மூன்று முடிச்சு கட்டும் நேரம் அமையவேண்டும். அப்பொழுதுதான் திருமணம் என்னும் வாழ்க்கை நீடித்து சுபிக்ஷ்மாக இருக்கும். சுபமுகூர்த்தம் குறிப்பது பற்றித் தெரிந்துகொள்ளலாம் 

திருமணம் என்றவுடன் இருவீட்டாரின் பெற்றோர்களின் ஒப்புதலுக்கு ஏற்ப திருமண சடங்குகளை ஒன்றன்பின் ஒன்றாகச் செய்யவேண்டும். முதலில் நல்ல ஜோதிடர்கள் மூலமாக ஆண், பெண் இருவரின்  திருமணப்பொருத்தம் என்னும் 12 நட்சத்திர பொருத்தத்தைப் பார்த்துவிடவேண்டும், இருவரின் ஜாதகத்தில் உள்ள தோஷம் (பாப தோஷ சாம்யம்) எந்த அளவில் உள்ளது, இருவரின் தசா புத்திகள் சரியாக உள்ளதா என்பதைத் துல்லியமாக ஒப்பிட்டு திருமணம் செய்ய முற்படவேண்டும். 

இதில் முக்கிய குறிப்பு.. ஆணின் தோஷம், பெண்ணை விட அதிகமாகவோ அல்லது சமமாக இல்லை எனில் திருமணம் செய்யக்கூடாது/ முக்கியமாக திருமணம் முகூர்த்தம் குறிப்பதை நல்ல ஜோதிடர் அல்லது புரோகிதரிடம் சரியான நாழிகையைக் கொண்டு அவரவர் முறைப்படி திருமணம் செய்ய வேண்டும். 

முகூர்த்தம் குறிக்கப் பெண்ணின் ஜாதகம் அவசியம் தேவை. சுபமுகூர்த்தம் என்ற நாழிகை குறிக்க, நல்ல நாள், நல்ல கிழமை, நல்ல திதி, நல்ல யோகம், தசா புத்திகள், அன்றைய கோட்சர நிலவரம் சரியாக உள்ளதா, குருபலம் மற்றும் சந்திர பலம் எவ்வாறு இருக்கிறது என்று மணமக்களின் ஜாதகம் கொண்டும் அலசி பார்க்கவேண்டும்.   

நாம் தமிழ் காலண்டரில் குறிப்பிடும் சுப முகூர்த்தத்தை எடுக்காமல் ஜாதகப்படி முகூர்த்தம் குறிக்கவேண்டும். முகூர்த்தம் குறிக்க முக்கியமானது பெண்ணின் நட்சத்திரத்தை கொண்டு தாராபலன், சந்திரபலன், பஞ்சாங்கம் கணித்துப் பார்க்கவேண்டும். முகூர்த்த லக்னம் என்றழைக்கப்படும் ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மாசி மாதத்தில் வரும் கும்பம் லக்னம் உத்தமமாக இருக்கும். முகூர்த்த லக்னத்திற்க்கு 2,7,8ம் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். லக்னத்திற்கும் பாப கர்த்தாரி கூடாது. 2, 7, 11-ம் அதிபதிகளின் தசாபுக்திகள் நடந்தாலும் திருமணம் செய்விக்கலாம். 

முகூர்த்தம் குறிக்க தவிர்க்க வேண்டியவை

  • ஆண் பெண் இருவருக்கும் ஜென்மம் நட்சத்திர நாள் அன்று, திரிதின ஸ்பிரிக், சந்திராஷ்டம நாட்களில், மற்றும் ராகு காலம் எமகண்டம், குளிகை போன்ற நேரங்களில் திருமணம் செய்யக்கூடாது.
     
  • முடிந்தவரை கிருஷ்ணபக்ஷம் காலங்களில் மற்றும் குருட்டு நாட்களான சனி, ஞாயிறு, செவ்வாய்க் கிழமைகளில் முகூர்த்தம் குறிப்பதைத் தவிர்க்கலாம்.
     
  • அஷ்டமி, நவமி, அமாவாசை, சதுர்த்தசி திதிகளை மற்றும் கரிநாள், மரண யோகம் இவற்றையெல்லாம் தவிர்க்கலாம். 
     
  • தீதுறு நட்சத்திரம் (பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சித்திரை, சுவாதி, மகம்), உடைபட்ட நட்சத்திரம் முகூர்த்த நாட்களைத் தவிர்க்க வேண்டும்.
     
  • சனீஸ்வரன் பிடியில் இருக்கும்பொழுது திருமணம் செய்யக்கூடாது என்று சிலர் கூறுவர். ஆனால், ஜாதகரீதியாக சனியினுடைய தசையோ புத்தியோ, கோச்சார சனி வரும் காலத்தில் திருமணம் கட்டாயம் நடைபெறும் என்பது நிதர்சனமான உண்மை. சனி என்பவர் திருமணத்தை முடித்துக் கொடுக்கும் கர்மகாரகன் ஆவர்.
     
  • இருவரது ராசி/ லக்னமும் ஒருவருக்கொருவர் 6, 8, 12ல் மறையக்கூடாது. களத்திரகாரகன் சுக்கிரன், தேவ குரு அஸ்தமனம் ஆகக்கூடாது. 
     
  • எண்ஜோதிடத்தில் எட்டு என்பது மோசமான எண். திருமண தேதி எட்டாக இருக்கக் கூடாது. முக்கியமாக ஆண் பெண் பிறந்த தேதி கூட்டுத்தொகை 8 ஆனால் திருமண தேதி 8 ஆக இருக்கக் கூடாது. திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது. எட்டாம் வீட்டு தசையின் சுயபுத்தி நடைபெறும் காலம் பிரச்னை கொடுக்கும்.
     
  • ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்கள் மற்றும் சில மாதங்கள் மலமாதம் வரும் அக்காலங்களைத் திருமண முகூர்த்தம் குறிக்கக்கூடாது.
     
  • சந்திர, சூரிய, கிரகண காலங்களில் மற்றும் வியதீபாதம், வைதிருதி, பத்ரா கர்ணம், சூரிய சங்ரமண நாட்களில் தவிர்க்கவேண்டும்.

முகூர்த்த நாட்களைத் தள்ளிப்போடலாம் 

சிலருக்கு ஜாதக ரீதியாக திருமண பொருத்தம் சரியாக இருந்தாலும் முகூர்த்தம் அன்று பெண்ணிற்கு குரு பலன் பெற்றிருக்க வேண்டும். திருமண நாளன்று ஜாதக ரீதியாக பெண்ணிற்கு ஏற்ற தசா புத்தி, அந்தரம், சூட்சமங்கள் நடைபெற்றிருக்கிறதா என்று பார்க்கவேண்டும். சந்திரன் பலன் சரி இல்லையென்றால் திருமண முகூர்த்தத்தைத் தள்ளிவைக்கவும். சத்திர பலம் என்பது ஜென்ம நட்சத்திரம் முகூர்த்தம் குறிக்கக்கூடிய அன்றைய தினம் சந்திரன் நிற்கும் ராசி வரை எண்ணி வந்த கூட்டுத் தொகை உத்தமமா அசுபமா என்று பார்க்க வேண்டும். 

தேய் பிறைசந்திரன் வளர்பிறைச் சந்திரன் இவற்றையும் பிரித்து கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் . குரு பலமும், சந்திரன் பலமும், தசா புத்திகளும் சரியாக அமையாதவர்கள் திருமண முகூர்த்தம் நாட்களைத் தள்ளிப்போடலாம். சில நேரங்களில் தவிர்க்க முடியாத காரணங்களில் திருமணம் செய்ய நாட்கள் முன்பின் இருப்பதால் குலதெய்வ வழிபாடு மற்றும் நாந்தி சடங்குகள் சம்பிரதாயங்கள் செய்து பார்த்துக்கொள்ள வேண்டும். திருமண முகூர்த்தம் குறிப்பது என்பது பற்றிய விவரம் அனைத்து பெற்றோர்களும், பெரியோர்களும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
 
குருவே சரணம் 

- ஜோதிட சிரோன்மணி தேவி

தொலைபேசி : 8939115647

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com