முன்னுரை
கடவுள் அனைத்துவித ஜீவ ராசிகளுக்கும் மற்றும் மானிட வர்க்கத்தில் பெண் இனங்களுக்கு மட்டுமே மிகச்சிறந்த பரிசான தாய்மையை அளித்துள்ளார் என்றால், அது மிகைப்படுத்துவது ஆகாது. தாயை ஜனனி என்று அழைப்பர். காரணம் ஒரு ஜீவனை ஜனிக்கச் செய்பவள் என்பதே ஆகும். தாய்மை அடைவதென்பது மட்டுமே ஒவ்வொரு பெண்ணிற்குமான நேசத்துக்குரிய ஆசை. அதுவே அவளின் கனவு, வாழ்வு மற்றும் இவ்வுலகில் இருப்பதற்கும் அர்த்தமாகும் என நினைப்பார்கள்.
ஒரு பயிரின் வளர்ச்சி என்பது ஒரு விதையைச் சார்ந்தும், அது விளையப்போகிற நிலத்தைச் சார்ந்தே அமையும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க வாய்ப்பில்லை. என்னதான், மற்ற காரணிகளான, சூரிய ஒளி, தண்ணீர் போன்றவை நன்றாக இருப்பினும் ஒரு பயிரின் வளர்ச்சிக்கு மேல் சொன்ன இரண்டும் தான் முக்கியம் ஆகிறது. அதனைப் போலவே ஒரு குழந்தையின் பிறப்புக்கு / கருவின் வளர்ச்சிக்கு ஆணின் அணுவும், பெண்ணின் கருமுட்டையும் முக்கிய காரணி ஆகிறதென்றால், அதில் சந்தேகம் இருக்க முடியாது.
வந்தியத்வ யோகம்
மலட்டுத்தன்மையை ஜோதிடத்தில் வந்தியத்வ யோகம் எனப்படும். அதாவது ஜோதிடத்தில், தோஷத்தைக் கூட ஒருவித யோகம் என்றே அழைப்பர். இந்த மலட்டுத்தன்மை, பல வகைகளில் தோன்றும்,
* அதாவது, சரியான மாதவிடாய் தோன்றாமை.
* பிறப்புறுப்புப் பாதை, வளர்ச்சியின் கீழ் இருப்பது அல்லது குறைபாடு உள்ளது.
* முக்கியமாக வாதம் எனும் நோய் மட்டுமே இதற்கு மூல காரணமாகும்.
வந்தியத்வ யோகம் - யோகத்துக்கான வகைப்பாடு
மொத்தம் 6 வகைப்படும்.
1. நேரம் தாழ்ந்து பருவமடைவது
2. இருவருள் ஒருவருக்கு, மலட்டுத்தன்மையுடன் இருப்பது,
3. முதன்மை (primary) மலட்டுத் தன்மை,
4. அடிக்கடி கருக்கலைப்பு செய்வதால்,
5. தொடர்ந்து, இறந்து பிறக்கும் குழந்தைகளால்,
6. கருத்தரிக்கும் சக்தியை இழந்திருப்பது.
நவீன மருத்துவம், பலவிதமான சிகிச்சைகளை, மலட்டுத்தன்மையை நீக்க அளிக்கப்படுகிறது. ஆனால், அது சில பக்க விளைவுகளை அளிப்பதோடு அதிக செலவையும் ஏற்படுத்துவதாய் உள்ளது என்பதனை அனைவரும் அறிவோம். பலவித நோய் சிகிச்சை முறைகளில், ஆயுர்வேதமும் முதல் கட்ட சிகிச்சைக்கு ஏற்றதாய் விளங்குவதாக, கூறப்படுகிறது.
நிறைய தம்பதியினர், தமது மலட்டுத் தன்மைக்குச் சரியான காரணம் தெரியாமல், பலவித பரிசோதனைகளையும், பல மருத்துவர்களின் ஆலோசனையையும் பெற்று மனம் நொந்து அதனாலேயே வீட்டிலும் பலரின் பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஆளாகாமல் தடுக்கவே, முதலில் எதனால் இந்த தன்மை என்பதை ஜோதிட வாயிலாக அறிந்து பின்னர் அதற்கான சிகிச்சையைத் தரும் மருத்துவரை நாடினால், நிச்சயம் குழந்தை பாக்கியம் பெறலாம். இவ்வகையான சிகிச்சை முறை ஒரு ஜாதகருக்கு ஏற்றதா / இல்லையா / ஏற்றது எனத் தெள்ளத்தெளிவாக அதாவது I V F (VITRO கருத்தரித்தல்) முறையிலோ அல்லது செயற்கை கருத்தரித்தல் முறையிலோ என்பதனை அறிந்து பின் செயல்பாட்டில் இறங்க ஏதுவாக இருக்கும்.
ஒரு பெண்ணின் ஜனன கால ஜாதகத்தில், பின் வருவனவற்றை மெதுவாகவும், தீர்க்கமாகவும் ஆய்வு செய்தால் ஒரு பெண்ணின் மலட்டுத் தன்மையை வெகுவாக அறியலாம். இந்த ஜோதிட சாஸ்திரமே நம்மைப் பயம் கொள்வதற்கோ அல்லது வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்கோ அல்ல என்பதனை யாவரும் உணருதல் அவசியம். இதில் கூறப்பட்ட விதிகளும், கருத்துக்களும் மானிட சமூகத்திற்கு ஒரு எச்சரிக்கைக்கான கையேடு தானே தவிர வேறு ஏதும் இல்லை, என உணருபவர்கள் மேலே தொடரவும். ஜோதிடத்தின் மீது நம்பிக்கை அற்றவர்கள் இதனை அறிவதால் எந்த பலனும் இல்லை. எது எப்படி ஆயினும், ஒவ்வொரு மானிடரும் தனது கடைசி மூச்சுக்குள் ஜோதிடத்தில் தனக்கு உள்ளது என்னவென சிறிதும் அறியாமல் ஒருபோதும் தாம் வந்த இடத்திற்குத் திரும்பச் செல்ல மாட்டார்கள்.
இதனை, ஆயுர்வேத முறையில் VANDHYATVA அதாவது மலட்டுத்தன்மை எனக் கூறுவார். இன்றைய நாகரீக உலகில், இனப்பெருக்கம் செய்யும் வயதில் உள்ளவர்களில், 10% முதல் 15% வரை மலட்டுத்தன்மை பெற்றுள்ளனர் என ஒரு மருத்துவ ஆய்வு அறிவிக்கிறது. இது சிறிது சிறிதாக அதிகமாவதைக் காண முடிகிறது, காரணம் நமது வாழ்க்கை முறையே ஆகும்.
சரி, எப்போது ஒரு பெண் ஆனவள், தாய்மைப் பேற்றை அடைய, சிறந்த மருத்துவரைக் காணலாம் என்றால், பின்வரும் பிரச்னைகளை உடையவர்கள் உடனடியாக மருத்துவரை நாடி, பரிசோதிப்பது நல்லது.
ஒழுங்கற்ற ரத்தப் போக்கு, அடிவயிறு வலித்தல், அடிக்கடி காய்ச்சல், அசாதாரண வெள்ளைப்படுதல், தாம்பத்திய உறவின் போது வலி மற்றும் சில கோளாறுகள், யோனி பகுதியில் எரிச்சல் அல்லது நமைச்சல் போன்றவையே அவை.
மேலே கூறிய அத்தனையையும், ஜோதிடத்தில், நிச்சயம் பிரச்னைக்கு முன்பாகவே, கணிக்க முடியும். இதனைத் திருமணத்திற்கு முன்பு பார்க்கும் திருமணப் பொருத்தத்தில் விளக்க முடியும். இன்றைய கால கட்டத்தில், வசதி, வாய்ப்பு போன்றவற்றால், இந்த திருமணப் பொருத்தத்தைச் சரியாகக் கண்டுகொள்வதில்லை. மேலும், சரியாக ஜோதிடர்கள் பார்த்துச் சொல்வதற்கு, கால அவகாசமும் மற்றும் கட்டணமும் தரத் தயாராக இல்லாத காரணத்தால், திருமணத்திற்குப் பின்னர் அதிக செலவு செய்து குழந்தை பெறுகிறார்கள். அதனால் ஒரு பெண்ணின் உடல் நிலை கெடுவதோடு, குழந்தை பெற்றெடுத்த பின்னர் தம்பதியரிடையே பல காரணங்களால் விவாகரத்து வரை கொண்டு செல்கிறதென்றால், இதற்குக் காரணம் நமது முன்னோர்கள் கூறிச்சென்ற ஜோதிட சாஸ்திரத்தை நம்பவோ / அதற்கு முக்கியத்துவம் தரவோ பலர் தயாராக இல்லை என்பதே ஒரு நிதர்சன உண்மையாகும்.
ஜனன கால ஜாதகத்தில், மலட்டுத்தன்மைக்கான காரணம் காணும் ஒரு சில வித ஜோதிட குறிப்புகள்
1) லக்கினத்திற்கு 8இல் புதன் இருக்குமே ஆனால், ஒரு பெண் ஒருமுறை மட்டுமே பெற்றெடுப்பாள். இதற்கு, காகவந்த்யா யோகம் எனப்படும்.
2) சூரியனும், சனியும் 8இல் இருப்பின், ஒரு பெண் மலடியாய் இருப்பாள்.
3) சந்திரன் ஒரு சுபருடன் கூடி, லக்கின அதிபதி செவ்வாய் அல்லது சனியாக இருப்பின்,
4) சனி அல்லது சூரியன் தமது சொந்த வீட்டில், 8ம் வீடாகி அதில் அமர்ந்திருந்தால்,
5) சூரியன், சந்திரன், குரு மற்றும் செவ்வாய் 8-இல் இருந்து அல்லது லக்கினத்திலிருந்து அல்லது 8-இல் சனியுடன் கூடி இருந்தால்,
6) தனுசு அல்லது மீனம் 5ஆம் வீடாகி, அதில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட அசுபர்கள் இருப்பின்,
7) சந்திரன் பாபர்களுடன் கூடி மற்றும் பாபர்களின் நவாம்சம் பெற்று (சாரம்) லக்கினத்தில் இருப்பின்,
8) புத்திரகாரகர் ஆகிய குரு அல்லது சுக்கிலத்தின் காரகராகிய சுக்கிரன் 8இல் / உடல் மற்றும் ரத்த காரகராகிய செவ்வாய் 5, 7 வீடுகளில் / 5, 7 வீடுகளை செவ்வாய் பார்வை பெற்றாலும் / ராகு யோகம் 5, 7 வீடுகளுக்கு இருப்பினும் குழந்தைகள் இறந்து பிறக்கும் வாய்ப்பு உண்டு.
9) பெண்களின் ஜாதகத்தில், குருவின் நிலையைப் பொறுத்து மேற்சொன்ன விளைவுகள் அகலவோ அல்லது நலிவடையவோ செய்ய வாய்ப்பு உள்ளது.
சராவளியின் கூற்றுப் படி, ஒரு பெண்ணின் ஜனன கால ஜாதகப்படி, செவ்வாய் 5-இல் இருப்பின் பிறந்த குழந்தையை, உடனடியாக கொன்றுவிடும். ஆனால், அந்த செவ்வாயை, குரு தொடர்பு (இணைவு/சாரம்/பார்வை) பெற்றிருப்பின் முதல் குழந்தையை மட்டும் கொல்லும். ஆனால், சுக்கிரன் போன்ற மற்ற சுவர்களின் தொடர்பு பெற்றிருப்பின் பிறந்த குழந்தையைக் கொல்லும் தன்மை மாறாது.
சூரியன், கன்னியா லக்கினத்திலிருந்து, செவ்வாய் 5 இல் இருந்தால், குழந்தையின் இறப்பு நிச்சயம். (ப்ரஹத் ஜாதகம்) செவ்வாயே லக்கினாதிபதி ஆகி, அவரே 5இல் இருப்பார் எனில் மற்றும் சுபர் பார்வையும் பெற்றிடும் போது, குழந்தை பாக்கியம் நிச்சயம். மீனம் லக்கினத்துக்காரர்களுக்கு ஒரு சிறப்பு யாதெனில், அவர்களுக்கு 5இல் செவ்வாய் இருப்பின் நிச்சயம் குழந்தைகள் பிறப்பது சாத்தியமாகிறது. ஆனால் அவரின் இரண்டாவது மனைவிக்குத் தான், என்பதை உணரவேண்டும்.
முன்னோர்கள் கூறிய வேத வாக்கியங்களில் உள்ளதை அப்படியே அதாவது குழந்தை பாக்கியத்தை / மலட்டுத் தன்மையை, பற்றிய கருத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது. அதன் பொருளாவது,
பிறந்த குழந்தையின் இறப்பு; பிறந்த குழந்தை பெற்றோருக்கு அடங்காமல் போவது, அதன் மூலம் பெற்றோருக்கு மனமகிழ்ச்சி இன்மை, பெற்றோர் சேர்த்து வைத்து புகழைச் சேதப்படுத்தி அவர்களைத் துயரத்தில் ஆழ்த்துவது, இங்கு முக்கியமாகக் கூற இருப்பது என்னவென்றால், குழந்தை பிறப்பு பற்றி ஆராயாமல் முடிவெடுத்து விட முடியாது.
5ஆம் பாவத்தை, அதன் அதிபதியினை, ஷேத்ரா ஸ்புடம், பீஜ ஸ்புடம் மற்றும் பல விஷயங்களை ஆராயாமல், குழந்தை பிறப்பு பற்றிக் கூறிவிட முடியாது. திருமணம் ஆன எல்லா பெண்களும், அவர்களின் விருப்பத்திற்கிணங்க குழந்தைப் பேற்றை அடைந்து, தாய்மை நிலை பெற எல்லாம் வல்ல ஷிர்டி சாயி நாதன் பாதம் பணிந்து இறைஞ்சுகிறேன்.
- ஜோதிட ரத்னா தையூர்.சி.வே.லோகநாதன்
தொடர்புக்கு: 98407 17857