திருவண்ணாமலையில் வெகு விமரிசையாக ஏற்றப்பட்டது பரணி தீபம்!

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலையில் வெகு விமரிசையாக ஏற்றப்பட்டது பரணி தீபம்!
Published on
Updated on
1 min read

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர்.

சிவனின் பஞ்சபூதத் தலங்களில் அக்னித்தலமான திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா  கடந்த நவம்பர் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-ம் நாள் தேரோட்டம் மிக விமரிசையாக நடைபெற்றது.

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் மிகச் சிறப்பு வாய்ந்தது பரணி தீபம். இது பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இத்திருவிழாவின் உட்பொருளை நாம் அறிய வேண்டும்.

அங்கிங்கெனாதபடி எங்கும் எல்லா உயிர்களிடத்திலும் ஜீவனாக, ஒளியாக, திகழ்ந்து இருக்கின்ற அந்தப் பரம்பொருள் ஜோதியே எல்லாவற்றிற்கும் மூலம், ஆதாரம் என்று வழங்கப்படுகிறது. இந்த தீபஜோதியை பார்க்கும்போது எல்லாவற்றிற்கும் முதற்கடவுளாக இருக்கும் அந்த பரஞ்சோதி காலை 3.30 மணி அளவில் கருவறையில் கற்பூர தீபமேற்றி அனைத்து உலகத்தையும் காப்பது அந்த ஜோதிதான் என்பது போல் சிவாச்சாரியார்கள் வேத பாராயணம் ஓத, வேதமுழக்கத்தோடு அச்சுடரை அங்கே நெய் ஊற்றப்பட்டு தயாராக மண் மடக்கிலும் ஏற்றப்படுகிறது.

அதன் பிறகு முதலில் ஏற்றப்பட்ட மடக்குடன் வெளியே கொண்டு வரப்படுகிறது. ஒரு பரம்பொருள் ஐந்து மூர்த்திகளாக விளக்குவது தான் தீபத் திருநாளன்று காலையில் கருவறையில் ஏற்றப்படும் பரணி தீபம். பஞ்சமூர்த்திகளும், பஞ்ச சக்திகளுடன் இணைந்து செயல்படுவதனைக் காட்டுவதற்காக,  அம்மன் கோயில் கருவறையில் ஐந்து அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன.

பிறகு இந்தச் சிவசக்தி மூர்த்தங்களிலிருந்து விரிவானதே எல்லா மூர்த்திகளும் என்பதனைக் காட்டுவதற்கு முதலில் விநாயகப் பெருமான் சன்னதி முதல் எல்லாச் சன்னதிகளிலும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இதுவே பரணி தீபத்தின் உட்பொருளாகும்.

லட்சக்கணக்கான மக்கள் கோயிலின் உள்வாளகத்தில் பரணி தீப தரிசனம் கண்டு அரோகரா, அரோகரா, அரோகரா என முழக்கமிட்டு இறைவடின வணங்கினர்.

இதைத்தொடர்ந்து, மாலை 6 மணிக்கு கோயில் தங்கக் கொடிமரம் எதிரே சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராகக் காட்சியளிக்க, 2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.

இதே நேரத்தில், கோயில் கொடிமரம் எதிரே உள்ள பெரிய அகண்டத்திலும் தீபம் ஏற்றப்பட்டு, பக்தி இன்னிசைக் கச்சேரி, வாணவேடிக்கைகள் நடைபெறுகின்றன.

இதையடுத்து, இரவு 10 மணிக்கு தங்க ரிஷப வாகனத்தில் உண்ணாமுலையம்மன் உடனுறை அருணாசலேஸ்வரர் வீதியுலாவும், இதர வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடைபெறுகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com