மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஜமீன் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஜமீனுக்கு சொந்தமான ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் சுமார் 500-ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான பால்குட விழா, பூக்குழி இறங்குதல் வெகுவிமர்ச்சையாக நடப்பது வழக்கம்.
நிகழாண்டு திருவிழா கடந்த பிப்ரவரி 27-ம் தேதி பூச்சொரிதல், காப்புக் கட்டுதலுடன் தொடங்கிய நிலையில், நேற்று காலை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். இதனைத்தொடர்ந்து இன்று காலை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்குதல் எனும் தீ மிதித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
பின்னர் கோவிலில் முன்பு ஊர் பொங்கல் நிகழ்ச்சி, முடி எடுத்தல், அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. மாலையில் கிடா வெட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனின் அருள் பெற்றுச்சென்றனர்.
திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மருங்காபுரி ஜமீன்தாரும், பரம்பரை அறங்காவலருமான ரெங்ககிருஷ்ண குமார விஜய பூச்சய நாயக்கர் செய்திருந்தார்.
இன்று மாலை பாரிவேட்டை மஞ்சள் நீராடுதலுடன் இரவு அம்மன் பூஞ்சோலை புகுதல் நடைபெறுகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை விடையாற்றியுடன் 10 நாட்கள் திருவிழா நிறைவு பெறுகிறது.