கோவை, மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அமிர்த கலசர் விநாயகர் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோவையை அடுத்த மணியகாரம்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது அமிர்த கலச விநாயகர் கோவில். பிரசித்தி பெற்ற இக்கோவில் வளாகத்தில் அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் வேண்டுதலின் படி, காலபைரவர் கோயில் கட்டபட்டு, கருவறை, கால பைரவர் சிலை விமானம் அமைத்து, வர்ணம் பூசி, பணிகள் செய்யப்பட்டது.
இந்நிலையில் திருப்பணிகள் நிறைவடைந்து காலபைரவர் கோயில் மகா கும்பாபிஷேக விழா கவுமார மடாலயம் சிரவை ஆதினம் தவத்திரு.இராமானந்த குமரகுருபர சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. மங்கல இசை, திருப்பள்ளி எழுச்சியுடன், மூர்த்திகளுக்கு ஆனந்து கட்டி காப்பணிவித்தல் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து காலபைரவருக்கு இரண்டாம் கால வேள்வி 108 வகை காய், கனி, மூலிகை பொருள்களை கொண்டு மகா யாகம் நடைபெற்றது. பின்னர் ஞானத்திரு உலா எனும் திருக்குடங்கள் கோயிலை வலம் வந்து, திருக்குட நன்னீராட்டு பெரு விழா நடைபெற்றது.
இதையும் படிக்க: எவ்வளவு மழை பெய்தாலும் எதிர்கொள்ள தயார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தொடர்ந்து கால பைரவர் விமானம் உள்பட மும்மூர்த்தி கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து மகா அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இதில் கோவை உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.