
பங்குனி உத்திர பெருவிழாவின் ஒரு பகுதியாக இன்று கும்பகோணம் நாகேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பழமையான சிவாலயங்களில் ஒன்றானதும், நாவுக்கரசரால் தேவாரப் பாடல் பதிவு பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகவும் விளங்குவது நாகேஸ்வரர் திருக்கோயில். இந்த ஆலயத்தில் நடைபெறும் முக்கிய விழாவாக பங்குனி உத்திர திருவிழா விளங்குகிறது.
நாகேஸ்வரர் ஆலயத்தில் கடந்த இரண்டாம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் இன்று நடைபெற்றது.
தேரில் நாகேஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மன் ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளித்தனர். தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.