

பிரசித்தி பெற்ற திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் தைப்பூச தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான பெருநலமா முலையம்மன் உடனுறை மகாலிங்கசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தைச் சுற்றிலும் நான்கு திசைகளிலும் சிவதலங்கள், நான்கு வீதிகளிலும் சிவன் கோயில்களுக்கும் நடுநாயகமாக இத்தலம் அமையப்பட்டுள்ளதால் இது பஞ்சலிங்கத்தலம் என்ற பெருமை பெற்றதாகும்.
இத்தலத்தில் சந்திரன் விநாயக பெருமான், அம்பிகை, அகத்திய முனிவர் உள்ளிட்ட முனிவர்களுக்கும், இறைவன் ஜோதி வடிவமாகவும், ஏகநாயக வடிவமாகவும் காட்சியளித்துள்ளார். வரகுண பாண்டியன் இத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்து சென்ற பின்னர் தான் பிரமஹத்தி தோஷம் நீங்கப் பெற்றான். இத்தலத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் 27 லிங்கங்கள் தனித்தனியே ஆடல்வல்லான் மண்டபத்தில் உள்ளது. இது காசிக்கு நிகரான தலமாகும் என வரலாறு கூறுகிறது.
இத்தலத்தைப் பட்டினத்தார், அருணகிரிநாதர், சுந்தரர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட பல அடியார்கள் போற்றி பாடியுள்ளனர். மேலும் பத்திரகிரியார் முத்தி பெற்ற தலமாகும்.
இத்தகைய சிறப்புப் பெற்ற சைவத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டு இவ்விழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் காலை மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான 9 ஆம் நாளான இன்று விநாயகர், முருகன், மகாலிங்கம் சுவாமி, ஸ்ரீ பிரகத்சுந்தர குஜாம்பிகை, சண்டிஸ்கரர் என பஞ்சமூர்த்திகள் தனித்தனி தேரில் எழுந்தருளி ஐந்து திருத்தேரோட்டம் நடைபெற்றது.
இதில் திருவாவடுதுறை ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழந்து வந்தனர். முக்கிய நிகழ்ச்சியான நாளை காவிரிக் கரையில் தைப்பூசம் தீர்த்தவாரி நடைபெறுகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.