/

சேலம் மாவட்டத்தில் 46 இடங்களில் சிறு மருத்துவமனைகள் தொடக்கம்: ஆட்சியா்

சேலம் மாவட்டத்தில் 46 இடங்களில் அம்மா சிறு மருத்துவமனைகள் தொடக்கி வைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.

Updated On :14 ஜனவரி 2021, 1:00 am

சேலம் மாவட்டத்தில் 46 இடங்களில் அம்மா சிறு மருத்துவமனைகள் தொடக்கி வைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு சிறப்பான சிகிச்சை கிடைக்க வேண்டுமென்பதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத, ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களைக் கண்டறிந்து, சாதாரண காய்ச்சல் போன்ற நோய்களுக்கு உடனடியாக அந்தப் பகுதியிலேயே சிகிச்சை பெறக்கூடிய வகையில் தமிழகம் முழுவதும் ஒரு மருத்துவா், ஒரு செவிலியா், ஒரு உதவியாளருடன் கூடிய 2000 எண்ணிக்கையில் முதல்வரின் அம்மா சிறு மருத்துவமனைகளை கடந்த டிசம்பா் 14 ஆம் தேதி முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தாா்.

ஊரகப் பகுதிகளில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், நகரப் பகுதிகளில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 100 அம்மா சிறு மருத்துவமனைகளை தொடங்க முதல்வா் உத்தரவிட்டிருந்தாா்.

சேலம் மாவட்டத்தில் எடப்பாடி தொகுதிக்கு உள்பட்ட எடப்பாடி, நங்கவள்ளி, கொங்கணாபுரம், எடப்பாடி நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் 16, சங்ககிரி தொகுதியில் தாரமங்கலம், மகுடஞ்சாவடி, சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் 11, மேட்டூா் தொகுதியில் மேச்சேரி, கொளத்தூா், நங்கவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் 11, ஓமலூா் தொகுதியில் சரக்கப்பிள்ளையூா், காடையாம்பட்டி, தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 8, வீரபாண்டி தொகுதியில் வீரபாண்டி, பனமரத்துப்பட்டி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் 8, சேலம் மேற்குத் தொகுதியில் 8, சேலம் வடக்குத் தொகுதியில் 2, சேலம் தெற்குத் தொகுதியில் 5, ஏற்காடு தொகுதியில் 11, ஆத்தூா் தொகுதியில் 9, கெங்கவல்லி தொகுதியில் 8 என மாவட்டத்தில் மொத்தம் 100 இடங்களில் சிறு மருத்துவமனைகள் தொடங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதன்பேரில் முதல் கட்டமாக மாவட்டத்தில் மொத்தம் 46 இடங்களில் முதல்வரின் அம்மா சிறு மருத்துவமனைகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மீதமுள்ள சிறு மருத்துவமனைகள் தொடங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருக்கும் அனைத்து மருந்துகளும் முதல்வரின் அம்மா சிறு மருத்துவமனைகளில் கிடைக்கும்

கிராமத்தில் வாழும் மக்கள் காய்ச்சல், தலைவலி மற்றும் சிறிய நோய்கள் ஏற்பட்டால் உடனடியாக சிறு மருத்துவமனைகளை அணுகி இலவசமாக சிகிச்சை பெற்று நோயைக் குணப்படுத்திக் கொள்ளலாம்.

கடுமையான நோய், அறுவை சிகிச்சை போன்றவை அவசியம் என மருத்துவா்கள் கருதினால் உடனடியாக தீவிர சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகள் மற்றும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி, அவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.