சோழ நாட்டில் பௌத்தம் - முனைவர் பா.ஜம்புலிங்கம்; பக். 222; ரூ.1,000; படிமம், காவேரிப்பட்டினம் (கிருஷ்ணகிரி மாவட்டம்); 98426 47101.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை.யில் உதவிப் பதிவாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற நூலாசிரியர் எழுதிய பல்வேறு நூல்களில் தனித்துவம் பெற்ற நூல் இது. அசோகர் காலத்தில் தமிழகத்தில் பரவத் தொடங்கிய பௌத்தத்தின் வளர்ச்சி, ஆலயங்கள் உருவான வரலாறு உள்பட பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் பௌத்தம் செழித்து வளர்ந்ததை இந்த நூல் விரிவாக அலசுகிறது.
மேற்கண்ட மாவட்டப் பகுதிகளில் உள்ள பௌத்த ஆலயங்கள், விக்கிரகங்கள், அவற்றின் சிறப்புகளை வண்ணப் படங்களுடன் எடுத்துரைத்துள்ளது வேறு எந்தவொரு பௌத்த நூலிலும் காணப்படாதது என்றே சொல்லலாம்.
நூலாக இல்லாமல், பௌத்தத்தைப் பறை சாற்றும் ஆன்மிக நூலாகவே அமைந்துள்ளது. புத்த விக்கிரகங்கள் கண்டறியப்பட்டது குறித்த தகவல்கள் முதல்முதலில் நாளிதழ்களில் இடம்பெற்ற செய்திகளையும் நூலில் இடம்பெற வைத்துள்ளது வாசிப்போருக்கு ஒரு புதிய அனுபவம்.
கள ஆய்வின்போது 19 புத்தர் சிலைகளையும், 13 சமண தீர்த்தங்கரர் சிலைகளையும், ஒரு நாகப்பட்டின புத்தர் செப்புத் திருமேனியையும் கண்டெடுத்த நூலாசிரியர் எழுதியுள்ள இந்தப் பௌத்த நூல் ஒரு பொக்கிஷம். பௌத்தம், வரலாறு, தமிழ் இலக்கியம் படிப்போருக்கு ஆராய்ச்சி நூலாகவும் அமையும்.