

திருச்சி, ஜூன் 10: திருச்சியில் கடந்த இரு நாள்களாக நடைபெற்ற 85-வது மாநில அளவிலான தட கள போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை சென்னை செயின்ட் ஜோசப் விளையாட்டு அகாதெமி அணி வென்றது.
போட்டியின் நிறைவு விழா, திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கும் மாநிலப் பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் என்.ஆர். சிவபதி கேடயங்களை வழங்கினார்.
பரிசுகள் விவரம்: சிறந்த தட கள வீரர்- பாலமுருகன் (சென்னை தெற்கு ரயில்வே), சிறந்த தட கள வீராங்கனை- எம். கோமதி (செயின்ட் ஜோசப் விளையாட்டு அகாதெமி). ஒட்டுமொத்த சாம்பியன்: ஆடவர் மற்றும் மகளிர் என பிரிவுகளிலும் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றது செயின்ட் ஜோசப் விளையாட்டு அகாதெமி அணி.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்டிஏடி) அணி இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
வெற்றி பெற்றோருக்கு கேடயங்களை வழங்கி அமைச்சர் என்.ஆர். சிவபதி பேசியது:
விளையாட்டுத் துறைக்கு இந்த ஆண்டு ரூ. 103.4 கோடி வழங்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆசிய தட கள போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளன.
இதில் 44 நாடுகள் பங்கேற்கின்றன. இதற்காக ரூ. 40 கோடியை முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார்' என்றார் அவர்.
விழாவில், விளையாட்டுப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் க. வைத்தியநாதன், திருச்சி கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆர். மனோகரன், மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக, திருச்சி மாவட்ட தட கள சங்கத் தலைவர் மு. ராமசுப்பிரமணி வரவேற்றார். செயலர் நல். அண்ணாவி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.