இரட்டையர்களும், இணை பிரியாத சர்ச்சைகளும்...
இந்திய விளையாட்டுத் துறையில் கடந்த ஒரு வாரமாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய டென்னிஸ் அணியைப் பற்றியதுதான். ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் ப


இந்திய விளையாட்டுத் துறையில் கடந்த ஒரு வாரமாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய டென்னிஸ் அணியைப் பற்றியதுதான்.
ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி அடங்கிய அணி பங்கேற்கும் என்று அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ) கடந்த 14-ம் தேதி அறிவித்தது.
அறிவிப்பு வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே லண்டனில் உள்ள மகேஷ் பூபதியும், ரோஹன் போபண்ணாவும் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, கூட்டறிக்கையும் வெளியிட்டனர்.
பயஸýடன் இணைந்து விளையாட முடியாது என்று அறிவித்த பூபதி, இதற்கு முன்னர் 1996, 2000, 2004, 2008 ஒலிம்பிக் போட்டிகளில் இருவரும் பங்கேற்றபோதும், பதக்கமின்றி வெறுங்கையோடே திரும்பி வந்திருக்கிறோம். இந்த நிலையில் இப்போது இரு முன்னணி வீரர்களின் (பூபதி-போபண்ணா) ஒலிம்பிக் வாய்ப்பை டென்னிஸ் சங்கம் தடுத்திருக்கிறது. இந்திய டென்னிஸýக்கு இது மோசமான நாள் என்று பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார்.
மகேஷ் பூபதி விலகினால், பயஸýடன் போபண்ணாவை விளையாட வைக்கலாம் என்று ஏஐடிஏ திட்டமிட்டிருந்தது. ஆனால் பயஸýடன் விளையாட முடியாது என்று போபண்ணாவும் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கவே, பிரச்னை மேலும் விஸ்வரூபமெடுத்தது. பூபதி, போபண்ணா இருவரும் தங்களின் முடிவில் கடைசி வரை பிடிவாதமாக இருக்கவே, அவர்களை சமாதானம் செய்வதற்கு டென்னிஸ் சங்கம் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.
இதனிடையே சூழ்நிலை தனக்கு பாதகமாகப் போய்விடும் என்பதை உணர்ந்த பயஸ், ஜூனியர் வீரருடன் தன்னை விளையாடுமாறு கூறினால், ஒலிம்பிக்கில் இருந்தே விலகிவிடுவேன் என்று ஊடகங்களின் மூலம் கடந்த புதன்கிழமை மிரட்டல் விடுத்தார். வீரர்களின் தொடர் நிர்பந்தத்தால் அதிர்ச்சியடைந்த டென்னிஸ் சங்கம், புதிய ஃபார்முலாவை வகுத்தது. அதன்படி ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் இரு ஆடவர் இரட்டையர் அணிகள் பங்கேற்கும்.
பூபதி-போபண்ணா ஓர் அணியாகவும், பயஸ்-விஷ்ணுவர்தன் ஆகியோர் ஓர் அணியாகவும் விளையாடுவார்கள். கலப்பு இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு வைல்டுகார்டு கிடைத்தால் அவருடன் பயஸ் பங்கேற்பார் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.
டென்னிஸ் சங்கம் நினைத்திருந்தால் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா சார்பில் அணியை அனுப்பாமல் இருந்திருக்க முடியும். ஆனால் வீரர்களின் நலன் கருதி அவர்கள் அந்த முடிவை எடுக்கவில்லை.
பூபதி, போபண்ணா ஆகியோரில் ஒருவர், பயஸýடன் ஜோடி சேர்ந்திருந்தால், இந்தியாவுக்கு பதக்கம் வெல்லும் வாய்ப்பு அதிகம். ஆனால் இப்போது அந்த நம்பிக்கை போய்விட்டது என்று டென்னிஸ் ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மத்திய விளையாட்டு அமைச்சகத்திடம் இருந்து பயிற்சிக்காக மாதம் ரூ.3.5 லட்சம் நிதியுதவி பெற்றுவிட்டு இப்போது தேச நலனைவிட தங்களின் சுயநலமே முக்கியம் என்று நினைத்து செயல்படுவதாக டென்னிஸ் வீரர்கள் மீது குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது.
அணியைத் தேர்வு செய்வது தேர்வுக் குழுவாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் டென்னிஸ் வீரர்கள் விஷயத்தில் அப்படியே தலைகீழாக நடந்திருக்கிறது. வீரர்களின் நிர்பந்தத்தால் அணி மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் விளையாட்டுத் துறையில் இதுபோன்ற சம்பவங்கள் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு பூபதி, போபண்ணா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று டென்னிஸ் சங்கத் தலைவர் அனில் கன்னா கூறியுள்ளார். பதக்கம் வெல்லும் பட்சத்தில் தண்டனையிலிருந்து தப்புவார்கள். இல்லையென்றால் 2 ஆண்டுகள் டென்னிஸ் விளையாட தடைவிதிக்கப்படலாம். ஆனாலும், இந்தத் தண்டனையால் டேவிஸ் கோப்பையில் விளையாடுவது மட்டுமே தடைபடலாம். ஏடிபி, கிராண்ட் ஸ்லாம் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை தடை செய்ய முடியாது. வீரர்கள் சற்றும் பயப்படாமல் தொடர்ந்து அடம்பிடித்தற்கு நம்மை எதுவும் செய்ய முடியாது என்பதும் ஒரு காரணம்.
எல்லா விளையாட்டுகளிலும் சர்ச்சைகள் இருக்கிறது என்றாலும், டென்னிஸ் விவகாரத்தைப் பொறுத்தவரையில் வீரர்கள் தங்களின் சொந்த கருத்து வேறுபாட்டால், இந்தியாவின் மானத்தையே கப்பலேற்றியிருக்கிறார்கள். ஒலிம்பிக் பதக்கமும் கனவாக போய்விடுமோ என்ற அச்சமும் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் டென்னிஸ் என்றாலே பயஸ்-பூபதியும், அவர்களின் சாதனைகளும்தான் நினைவுக்கு வரும். ஆனால் இனிமேல் டென்னிஸ் என்றாலே பயஸ்-பூபதியின் சாதனைகளைவிட சர்ச்சைகளே அனைவருக்கும் நினைவுக்கு வரும்.
மகேஷ் பூபதி மறுத்தது ஏன்?
மகேஷ் பூபதி வெளிப்படையாகப் பேசியதால் அவர் மீது இந்திய ரசிகர்களிடம் தவறான எண்ணம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பயúஸô, அமைதியாக இருந்துவிட்டு, திரைமறைவின் பின்னணியில் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார் என்பதே வட இந்திய பத்திரிகை வட்டாரங்களில் இப்போது பரவலாகப் பேசப்படும் விஷயம். பயஸýடன் இணைந்து விளையாடினால் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்டாலும், அதை மகேஷ் பூபதி மறுத்ததன் பின்னணியில் பல காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
1996, அட்லாண்டா ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்றுவிட்ட பயஸ், மகேஷ் பூபதிக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் கிடைக்கக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருப்பதாகவும், அதன் காரணமாகவே ஒலிம்பிக் போட்டியில் இளம் வீரருடன் களமிறங்க விரும்புவதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் பூபதிக்கு அடுத்த முன்னணி வீரரான ரோஹன் போபண்ணாவுடன் விளையாட விரும்புவதையே, பயஸ் அவ்வாறு மறைமுகமாகக் குறிப்பிட்டார். தரவரிசையில் முன்னிலையில் இருப்பதால் டென்னிஸ் சங்கம் தனக்கே முன்னுரிமை கொடுக்கும். போபண்ணா, நம்முடன் இணைந்து விளையாடும்பட்சத்தில் மகேஷ் பூபதி ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும் என்று பயஸ் நினைத்தார். இதுமட்டுமின்றி மகேஷ் பூபதியுடன் இனி விளையாடமாட்டேன் என்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளானார் பூபதி. இதுபோன்ற காரணங்களாலேயே பயஸýடன் ஒலிம்பிக்கில் பங்கேற்றால் நம்மை நிச்சயம் கவிழ்த்துவிடுவார் என்று பூபதி அஞ்சுகிறார். பயஸ், தன்னை முதுகில் குத்திவிட்டதாக பூபதி கூறுதவதற்கு இதுதான் காரணம். 38 வயதை எட்டிவிட்ட மகேஷ் பூபதிக்கு, இதுவே கடைசி ஒலிம்பிக் என்பதால் எப்படியாவது பதக்கம் வெல்ல வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
பயஸýக்கும், பூபதிக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்படுவதும், பிரிவதும் மீண்டும் இணைவதும் புதிதல்ல. கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், கடந்த 4 ஒலிம்பிக் போட்டிகளில் இணைந்தே விளையாடியுள்ளனர்.
ஆனால் இப்போதைய சூழ்நிலையில் பயஸ், தனக்கு எதிராக செயல்படக்கூடும் என்பதாலேயே மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கிறார் பூபதி. அதனாலேயே அணி தேர்வு விஷயத்தில் மகேஷ் பூபதி பிடிவாதமாக இருந்துவிட்டார். மகேஷின் வாய்ப்பை தட்டிப்பறிக்க நினைத்தார் பயஸ், ஆனால் அவரின் திட்டமே இப்போது அவருக்கு பிரச்னையாகிவிட்டது என்று டென்னிஸ் வட்டாரங்களில் பேசப்படுகிறது. பயஸýக்கு தீவிர ஆதரவளித்து வந்த மூத்த விளையாட்டு பத்திரிகையாளர்கள்கூட, அவரின் சமீபத்திய செயல்பாடுகளால் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
காத்திருக்கிறது சிக்கல்
ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்கு சானியா மிர்சாவுக்கு வைல்டுகார்டு (நேரடித்தகுதி) கிடைக்குமா? என்பது வரும் 28-ம் தேதிதான் தெரியவரும். வைல்டுகார்டு கிடைத்தால், கலப்பு இரட்டையர் பிரிவில் சானியாவுடன், பயûஸ விளையாட வைப்பதாக பயஸýக்கு உத்திரவாதம் கொடுத்துள்ளது டென்னிஸ் சங்கம்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சானியாவும், பூபதியுமே கலப்பு இரட்டையரில் பங்கேற்று வருகின்றனர். சமீபத்தில் முடிவடைந்த பிரெஞ்சு ஓபனில் இந்த ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. அடுத்ததாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டியிலும் இவர்கள் இருவருமே இணைந்து விளையாட உள்ளனர். மகேஷ் பூபதியுடன் விளையாடுவதற்கே முன்னுரிமை என்று சானியா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள பூபதி, வைல்டுகார்டு கிடைக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதன்பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். ஒருவேளை வைல்டுகார்டு கிடைக்கும்பட்சத்தில் நாங்கள் இருவருமே இணைந்து விளையாடுவோம் என்று சானியாவும், பூபதியும் அடம்பிடிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...