தோனியின் முடிவுகளும், தொடரும் சர்ச்சைகளும்...
இந்திய கிரிக்கெட் அணி சமீபகாலமாக வெற்றி பெறாவிட்டாலும், சர்ச்சைகளுக்கு மட்டும் பஞ்சமில்லை. சரியாக பீல்டிங் செய்வதில்லை என்று கூறி மூத்த வீரர்களான சச்சின், சேவாக், கம்பீருக்கு சுழற்சி முறையில் ஓய்வளித்


இந்திய கிரிக்கெட் அணி சமீபகாலமாக வெற்றி பெறாவிட்டாலும், சர்ச்சைகளுக்கு மட்டும் பஞ்சமில்லை. சரியாக பீல்டிங் செய்வதில்லை என்று கூறி மூத்த வீரர்களான சச்சின், சேவாக், கம்பீருக்கு சுழற்சி முறையில் ஓய்வளித்தது, சேவாக்-தோனி மோதல், வீரர்கள் தேர்வில் தோனி பாரபட்சமாக செயல்படுகிறார் என்ற முன்னாள் வீரர்களின் குற்றச்சாட்டு, ஆசிய கோப்பையில் சேவாக் ஓய்வு என ஓயாமல் சர்ச்சைகள் தொடர்கிறது.
2007-ல் இருபது ஓவர் உலகக் கோப்பையை வென்றதன் மூலம் இந்திய அணியின் இரும்பு கேப்டனாக உயர்ந்தார் தோனி. அதன்பிறகு ஐபிஎல் உள்ளிட்ட உள்ளிட்ட சில வெற்றிகளால் பி.சி.சி.ஐ.யின் நம்பிக்கைக்குரியவரானார். கடந்த ஆண்டு உலகக் கோப்பையையும் வென்று புகழின் உச்சிக்கே சென்றார். கிரிக்கெட் உலகின் அதிர்ஷ்டக்காரர் என்றழைக்கப்பட்ட தோனி, இப்போது சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
சுழற்சி முறையில் சச்சின், சேவாக், கம்பீருக்கு ஓய்வளித்துவிட்டு, அவர்கள் சரியாக பீல்டிங் செய்வதில்லை என்று குற்றம்சாட்டினார் தோனி. இதனால் மூத்த வீரர்களின் எதிர்ப்புக்கு உள்ளானார். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசிய கம்பீர், "முன்னதாகவே முடிக்க வேண்டிய ஆட்டத்தைக்கூட கடைசி ஓவர் வரை தோனி இழுத்துச் செல்கிறார்' என்று கூறி வெளிப்படையாகவே விமர்சித்துவிட்டார். இதனால் மற்றவர்களை குற்றம்சாட்டி தன்னுடைய பலவீனம் வெளிப்பட தானே காரணமாகிவிட்டார் தோனி.
முத்தரப்புத் தொடரில் தன்னுடைய கீப்பிங் எப்படி இருந்தது என்பதை யோசித்திருந்தால், மூத்த வீரர்களை விமர்சித்திருக்கமாட்டார் தோனி. ஸ்டெம்புக்கு பின்னால் நிற்காமல், முன்னால் வந்து நின்று பந்து நேரடியாக ஸ்டெம்பை தகர்க்கும் என்ற தவறான கணிப்பினால் சில நல்ல ரன் அவுட்களை கோட்டைவிட்டார். அணி தேர்வில் தோனி பாரபட்சமாக செயல்படுவதாக கபில்தேவ் பகிரங்கமாகவே குற்றம்சாட்டிவிட்டார். அதை நிரூபிக்கும் விதமாகவே முத்தரப்புத் தொடரில் தோனியின் அணித்தேர்வும் அமைந்துவிட்டது.
முத்தரப்புத் தொடரை உன்னிப்பாகக் கவனித்தால் கபில்தேவின் குற்றச்சாட்டு உண்மை என்பதை மறுக்க முடியாது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இருபது ஓவர் போட்டியில் ஆல்ரவுண்டரான இர்ஃபான் பதானுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ஒருநாள் போட்டியிலும் அவருக்கு 4 ஆட்டங்களில் மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டது. 4 ஆட்டங்களிலும் அவர் சிறப்பாக ஆடியபோதும், இலங்கைக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் நீக்கப்பட்டார்.
ஆனால் சுரேஷ் ரெய்னா, ஆல்ரவுண்டர் வரிசையில் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தொடர்ந்து ரன் குவிக்கத் தவறியபோதும், 8 போட்டிகளிலும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இவையெல்லாம் தோனியின் பாரபட்சமான செயல் என சுட்டிக்காட்டப்படுகிறது. முத்தரப்புத் தொடரில் 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள பதான் 96 ரன்களையும், 6 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். அதேசமயத்தில் 8 ஆட்டங்களில் விளையாடிய ரெய்னா 174 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 101 ரன்களும், 3 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.
இதை வைத்துப் பார்க்கும்போது எந்த அடிப்படையில் ரெய்னா, ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஏன் பதான் நீக்கப்பட்டார் என்பது சிந்திக்க வேண்டிய விஷயம். சுழற்சிமுறையில் மூத்த வீரர்களை மட்டும் நீக்காமல், நடுவரிசையில் ரெய்னா, ஜடேஜா, ரோஹித் சர்மாவுக்கும் மாறிமாறி வாய்ப்பளித்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் ஒரு வீரருக்கு ஓர் ஆட்டத்தில் மட்டுமே ஓய்வளிக்கப்பட்டிருக்கும்.
ஆனால் அதைச் செய்யாமல் சச்சின், சேவாக், கம்பீர் போன்ற மூத்த வீரர்களுக்கு மட்டும் ஓய்வளித்தது, பதானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது போன்றவற்றைப் பார்க்கும்போது மூத்த வீரர்களை அணியிலிருந்து ஓரம் கட்டி விடவேண்டும் என்பதுதான் தோனியின் உத்தியாக இருக்குமோ என்பதே கிரிக்கெட் வட்டாரத்தில் இப்போது எழுந்துள்ள கேள்வி. ஓராண்டுக்கு முன்பு சென்னையில் நடந்த தேர்வுக்குழு கூட்டத்தின்போது தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்துக்கும், தோனிக்கும் மோதல் ஏற்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிசிசிஐ நிர்வாகிகளின் ஆதரவின் காரணமாகவே, தோனி இதுபோன்ற துணிச்சலான முடிவுகளை எடுத்ததாகவும், மூத்த வீரர்களுடன் மோதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ச்சியாக 8 டெஸ்ட் போட்டிகளில் தோற்றபோதும்கூட, தோனி கேப்டன் பதவியில் தொடர்வதற்கு பிசிசிஐ நிர்வாகிகளே காரணம் என்றும் கூறப்படுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 4 டெஸ்ட் போட்டிகளில் 8 இன்னிங்ஸிலும் சேர்த்து 220 ரன்களையும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 102 ரன்களையும் மட்டுமே எடுத்துள்ளார். உலகக் கோப்பை உள்ளிட்ட ஒன்றிரு ஆட்டங்களைத் தவிர, சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக விளையாடவில்லை தோனி.
முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி சொன்னது போலவே கேப்டன் பதவி பறிபோனால் அணியில் தனக்கு இடமில்லை என்பது தோனிக்கு நிச்சயம் தெரியும். இப்போது ஆதரவளித்தாலும், தோனியை நம்பி நீண்ட நாள்கள் இருக்க முடியாது என்பதை பிசிசிஐ நிர்வாகிகளும் மெல்ல உணரத்தொடங்கிவிட்டனர். அதனாலேயே இப்போது விராட் கோலிக்கு துணை கேப்டன் பதவியையும் அளித்துள்ளனர். கோலிக்காகவே, சேவாக்கையும் நீக்கிவிட்டதாகத் தெரிகிறது.
ஆசிய கோப்பைக்குப் பிறகு அணியில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படி நிகழும் பட்சத்தில் கோலியின் செயல்பாட்டை பொறுத்து, அவர் ஒருநாள் போட்டியின் கேப்டனாக நியமிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் டெஸ்ட் அணியின் கேப்டனாக மட்டுமே தோனி தொடரலாம். ஒருநாள் அணியில் இருந்து முற்றிலுமாக தோனி கழற்றிவிடப்படவும் வாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...