

கோவையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய மாநில ஜூனியர் தட களப் போட்டியில் 3 புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.
ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்கள், கோவை மாவட்ட தட கள சங்கம் சார்பில் கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் இப் போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து 22 தடகள சங்கங்களைச் சேர்ந்த சுமார் 2,700 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
போட்டிகளை கோவை மேயர் செ.ம. வேலுசாமி தொடங்கிவைத்தார். தமிழக தட கள சங்கத் தலைவர் டபுள்யு.ஐ. தேவாரம், வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்- செயலர் எம்.விஜயகுமார், எம்.எல்.ஏ. சேலஞ்சர் துரை, கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவர் பி.ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மகளிர் பிரிவு: 18 வயதுக்கு உள்பட்டோருக்கான 5 கி.மீ. நடைப் போட்டியில் சென்னை செயின்ட் ஜோசப் அகாதெமியின் மதுமிதா கரோடா, 28.20.6 நிமிடங்களில் இலக்கை எட்டி தங்கம் வென்றதோடு, புதிய சாதனையும் படைத்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எஸ்.டி.ஏ.டி) எம்.ஹரிதா வெள்ளி பதக்கமும், செயின்ட் ஜோசப் அகாதெமி வீராங்கனை எஸ்.யாழினி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
18 வயதுக்கு உள்பட்டோருக்கான குண்டெறிதல் போட்டியில் செயின்ட் ஜோசப் அகாதெமி கே.சுபாஷினி, 12.95 மீட்டர் தூரம் குண்டை வீசி தங்கம் வென்றதோடு, புதிய சாதனையும் படைத்தார். எஸ்.டி.ஏ.டி.யின் பி.மஞ்சுளா வெள்ளிப் பதக்கமும், செயின்ட் ஜோசப் அகாதெமியின் ஜி.திவ்யா வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
இதே வயதுப் பிரிவு மும்முறை தாண்டுதல் போட்டியில் இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) வீராங்கனை ஜி.கார்த்திகா தங்கமும், எஸ்.டி.ஏ.டி-யின் எம்.ஜனனி வெள்ளி, எம்.மோனிஷா சிவகாமி வெண்கலம் வென்றனர்.
20 வயதுக்கு உள்பட்டவர்களுக்கான உயரம் தாண்டுதலில் சாய் வீராங்கனை கே.வி.மனோபாலா தங்கமும், செயின்ட் ஜோசப் அகாதெமியின் எஸ்.என்.அபிநயா வெள்ளியும், ராயல் தட கள சங்கத்தின் கே.லாவண்யா வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
ஆடவர் பிரிவு: 20 வயதுக்கு உள்பட்டவர்களுக்கான வட்டெறிதல் போட்டியில் ராயல் கிளப்பின் எஸ்.எம்.திவாஹர் ராஜா 48.32 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனை படைத்து தங்கம் வென்றார். எஸ்.டி.ஏ.டி.யின் சி.பிரபாகரன் வெள்ளி, செயின்ட் ஜோசப் அகாதெமியின் ஏ.தெüஷிப் அஹமது வெண்கலம் வென்றனர்.
14 வயதுக்கு உள்பட்டவர்களுக்கான உயரம் தாண்டுதலில் வி.சிபிசக்கரவர்த்தி (எஸ்.டி.ஏ.டி.) தங்கம், ஜே.அஜய் (செயின்ட் ஜோசப்) வெள்ளி, எம்.தங்க உதியார் (எஸ்.டி.ஏ.டி.) வெண்கலப் பதக்கம் வென்றனர். 14 வயதுக்கு உள்பட்டவர்களுக்கான குண்டெறிதல் போட்டியில் எம்.சுரேஷ் (எஸ்.டி.ஏ.டி.) தங்கம், சபரிராஜன் (செயின்ட் ஜோசப்) வெள்ளி, டி.சத்யராஜ் (சேலம்) வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.