/

புணே வாரியர்ஸூக்கு 146 ரன்கள் இலக்கு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் புணே வாரியர்ஸ் அணிக்கு 146 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.

News image
Updated On :11 ஏப்ரல் 2013, 7:30 pm

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் புணே வாரியர்ஸ் அணிக்கு 146 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது.

புணேவில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியில் ஷேன் வாட்சன், ஷான் டெய்ட், ராகுல் சுக்லா ஆகியோருக்குப் பதிலாக ஜேம்ஸ் பாக்னர், குஷல் பெரேரா, ஹர்மீத் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

புணே அணியில் மார்லான் சாமுவேல்ஸ், மணிஷ் பாண்டே ஆகியோருக்குப் பதிலாக யுவராஜ் சிங், ஹர்மீத் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ராகுல் திராவிட் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அந்த அணியில் குஷல் பெரேரா முதல் ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தபோதும், அஜிங்க்ய ரஹானே-ராகுல் திராவிட் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 11.1 ஓவர்களில் 81 ரன்கள் சேர்த்தது. 27 பந்துகளைச் சந்தித்த ரஹானே 3 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து வந்த ஸ்டூவர்ட் பின்னி ஒரு ரன்னில் வெளியேற, மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய திராவிட் 43 பந்துகளில் அரைசதம் கண்டார். அவர் 48 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசிக் கட்டத்தில் பிராட் ஹோட்ஜ் 22, பாக்னர் 19 ரன்கள் சேர்க்க, ராஜஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்தது.

புணே வாரியர்ஸ் தரப்பில் ராகுல் சர்மா, யுவராஜ் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.