

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் கோலி, புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார். தோனி அணியில் இல்லாத சூழலில் இந்திய அணியை மிகப் பெரிய சவால்களுக்குத் தயார்படுத்தவேண்டிய நிலைமையில் உள்ளார்.
வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணியுடன் ஒரேயொரு டெஸ்ட் போட்டி, மூன்று ஒரு நாள் ஆட்டங்களில் பங்கேற்கிறது. டெஸ்ட் போட்டி ஃபதுல்லாவில் நாளை தொடங்குகிறது.
இந்தியா இதுவரை வங்கதேசத்தில் 7 டெஸ்டுகள் விளையாடியுள்ளது. 6-ல் வெற்றி, ஒரு போட்டி டிரா. 2010க்குப் பிறகு இந்திய அணி அங்கு டெஸ்ட் போட்டியில் ஆடவில்லை. இந்த டெஸ்ட் போட்டியில் தோற்றுவிட்டால் தரவரிசையில் 7-வது இடத்துக்கு இறங்கிவிடும். வெற்றி பெற்றால் மூன்றாவது இடத்தில் இருக்கும்.
வங்கதேச அணியில் விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடவுள்ளார். ருபெல் ஹொசைன், மொஹமது சாஹித் ஆகிய இருவருக்கும் உள்ள போட்டியில் ருபெல் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புண்டு.
இந்திய அணியில் அஸ்வினும் ஹர்பஜனும் சுழற்பந்து வீச்சாளர்களாக இருப்பார்கள். இதற்கு முந்தைய டெஸ்டில் ஆடிய ராகுல், ரைனாவுக்குப் பதிலாக தவன், புஜாரா ஆகியோர் இடம்பெறுவார்கள்.
இனி டெஸ்ட் அணிக்கு முழுநேர கேப்டனாக இருக்கும் கோலி பல திட்டங்களுடன் பெரிய கனவில் இருக்கிறார். போதுமான அளவு கற்றுக் கொண்டோம். இனி சாதனை படைக்க வேண்டும் என்று சமீபத்தில் பேட்டியளித்தார். அடுத்து இலங்கை, தென் ஆப்பிரிக்க அணிகளுடன் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதற்கான நல்ல பயிற்சியாக இந்த டெஸ்ட் போட்டி அமையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.