வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கரீபியன் தீவுகளின் கண்ணீர்த் துளி

2015, செப்டம்பரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கண்ணீர் மல்கப் பேசிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஜாம்பவான் கேரி சோபர்ஸ்,

News image
Updated On :7 ஏப்ரல் 2016, 7:22 pm

2015, செப்டம்பரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கண்ணீர் மல்கப் பேசிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஜாம்பவான் கேரி சோபர்ஸ், "மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக இதய சுத்தியுடன் விளையாட எந்த ஒரு வீரரும் தயாராக இல்லை. ஐ.பி.எல். போன்ற டி20 போட்டிகள் எமது அணியின் ஆன்மாவை சிதைக்கின்றன. எமது அணிக்காக மட்டுமே நான் விளையாடினேன். இன்று எந்தவொரு வீரரும் அப்படி இல்லை' என்றார். அவர் பேசி முடிக்கும்போது அவருடைய கண்கள் குளமாகியிருந்தன. "கரீபியன் தீவுகளின் கண்ணீர்த் துளி' என அதை வர்ணித்திருந்தது "ட்ரினிடாட் எக்ஸ்பிரஸ்' பத்திரிகை. மேற்கிந்தியத் தீவுகள் அணியினரை பணத்தாசை பிடித்தவர்களாகத்தான் இதுவரை உலகம் பார்த்தது. ஆனால் உண்மை...?
என்னதான் நடக்கிறது?
 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி முடிந்தவுடன் "மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் எங்களுக்கு உதவியதை விட, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமே எங்களுக்கு அதிகமாக உதவியது' என்றார் டுவைன் பிராவோ. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் டேரன் சமி ஒரு படி மேலே சென்று, "சீருடைகூட இல்லாமல் உலகக் கோப்பையில் விளையாட வந்தோம். கோப்பையோடு நாடு திரும்புகிறோம்' என்றார்.
 மேற்கிந்தியத் தீவுகள் அணி என்பது, இந்தியா, பாகிஸ்தான் போல ஒரு நாட்டை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தும் அணி கிடையாது. பல நாடுகளைப் பிரதி நிதித்துவப்படுத்தும் ஓர் அணி என்பதுதான் சரியானது. 15 கரீபியன் நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஒன்றாக சேர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் என்ற பெயரில் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். 1920-இல் ஆங்கிலேயர்கள், தமது ஆளுமையின் கீழ் இருந்த கரீபியன் தீவுகளைச் சேர்ந்த நாடுகளை ஒன்றிணைத்து கிரிக்கெட் அணியொன்றை உருவாக்கினார்கள். அவர்களுக்காக கிரிக்கெட் வாரியம் ஒன்றையும் உருவாக்கினார்கள். அந்த அமைப்புகளே இன்று வரைக்கும் பேணப்படுகின்றன.
முரண்பாடுகள் எங்கே...?
 மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீரர்களுக்கு என தனியாக ஒரு சங்கம் இருக்கிறது. அது கிட்டத்தட்ட நமது தொழிலாளர் யூனியன் போன்றது. கிரிக்கெட் வீரர்களால் கிரிக்கெட் வீரர்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. வீரர்களுக்கு எல்லாவகையிலும் ஆதரவு தர வேண்டிய அவர்களோ, ஊதியம் மற்றும் இதர சலுகைகள் விஷயத்தில் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்தை நிபந்தனை இல்லாமல் ஆதரிக்கின்றனர்.
 இதன் தொடர்ச்சியாக இரு அமைப்புகளும் சேர்ந்து அணி வீரர்களின் சம்பளத்தில் கை வைக்கத் தொடங்கின. வீரர்களுக்காகக் குரல் கொடுக்க உருவாக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் சங்கமோ, "வீரர்களை அதிகமாக சம்பாதிக்க அனுமதிப்பது தவறு' என்கிறது. தங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமையை கிரிக்கெட் வீரர்கள் சங்கம் இழந்துவிட்டது என வீரர்கள் போர்க் கொடி தூக்கினர். முதலாளிகளும், தொழிலாளர் யூனியனும் சேர்ந்து தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பதற்கு ஒப்பானது இது என்றனர்.
 உண்மையில் சம்பளம் என்பது மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னணி வீரர்களுக்கு இரண்டாம் பட்சம்தான். ஐ.பி.எல்., கரீபியன் கிரிக்கெட் லீக் எனப் பல வழிகளிலும் கோடிக்கணக்கான பணம் அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால்,
 தங்களை கிள்ளுக் கீரைகள் போல மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் நடத்துவதைத்தான் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எங்களை ஒரு வார்த்தை கூட கேட்காமல், எங்களது சம்பளத்தில் 80 சதவீதத்தை வெட்டி விட்டு, "விரும்பினால் விளையாடுங்கள். இல்லையென்றால் வேறு வீரர்களை வைத்து விளையாடுவோம்' என தெனாவட்டாகப் பேசுவதைத் தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றார் கிறிஸ் கெயில். தனியார் கிரிக்கெட் போட்டிகள் மூலமாகவும், விளம்பரங்கள் மூலமாகவும் ஆண்டுக்கு சுமார் ரூ.50 கோடிக்கும் அதிகமாக சம்பாதிக்கும் அவருக்கு கிரிக்கெட் வாரியம் தரும் சம்பளம் ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் எதிர்பார்ப்பது மரியாதை ஒன்றையே. "உலகெங்கும் உள்ளவர்கள் எங்களை மதிக்கிறார்கள். ஆனால், எமது சொந்தக் கிரிக்கெட் வாரியம் மட்டுமே எங்களை மதிப்பதில்லை' என ஒருமுறை மனம் வெறுத்துப் போய்ச் சொன்னார் பிராவோ.
 1970-களில் இருந்த மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட் புரட்சி இப்போதுதான் மீண்டும் வெடித்துள்ளது. ஆடவர், மகளிர், 19 வயதிற்கு உட்பட்டோர் என எல்லா வகையான கிரிக்கெட்டிலும் அவர்கள் சாம்பியனாகி இருக்கிறார்கள். அதைக் காக்க வேண்டியது மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் கடமை.
 "நிஜத்திலும், களத்திலும் உண்மையான வீரர்களாக இருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஆதரிக்க வேண்டும்' என சச்சின் தனது சுட்டுரையில் வேண்டுகோள் விடுத்திருந்தார். செவி சாய்க்குமா மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம்...?

"1970-களில் இருந்த மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட் புரட்சி இப்போதுதான் மீண்டும் வெடித்துள்ளது. ஆடவர், மகளிர், 19 வயதிற்கு உட்பட்டோர் என எல்லா வகையான கிரிக்கெட்டிலும் அவர்கள் சாம்பியனாகி இருக்கிறார்கள். அதைக் காக்க வேண்டியது மேற்கிந்திய
 தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் கடமை.'
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.