ஐபிஎல் தொடரில் 5000 ரன்களைக் கடந்து ரோஹித் சர்மா சாதனை
ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் போட்டிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் தனது 5000 ரன்களைக் கடந்து சாதனைப் படைத்துள்ளார்.
13ஆவது ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இன்று (வியாழக்கிழமை) அபுதாபி மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்ததையடுத்து மும்பை அணி பேட் செய்து வருகிறது. இந்நிலையில் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய மும்பை அணியின் கேப்டனும், அதிரடி ஆட்டக்காரருமான ரோஹித் சர்மா ஐபிஎல் போட்டியில் தனது 5000 ரன்களைக் கடந்து சாதனைப் படைத்துள்ளார்.
2ஆவது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி விளாசியதன் மூலம் இந்த சாதனையை அவர் படைத்தார். இதுவரை 187 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மாவின் இந்த சாதனையை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதற்கு முன்னதாக சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா 189 போட்டிகளில் விளையாடி 5368 ரன்களும், பெங்களுரூ அணியின் விராட்கோலி 172 போட்டிகளில் விளையாடி 5430 ரன்களும் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.