கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 4 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் குவித்துள்ளது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (ஏப்ரல் 14) கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதனைடுத்து, சன் ரைசர்ஸ் முதலில் பேட் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் ஹாரி ப்ரூக் களமிறங்கினர். ஹாரி ப்ரூக் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால் 9 ரன்களில் ரசல் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் ராகுல் திருப்பாதி 9 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
இதனையடுத்து, ஹாரு ப்ரூக் உடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் மார்கரம். இந்த இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறப்பாக விளையாடிய கேப்டன் மார்கரம் 26 பந்துகளில் அதிரடியாக 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். பின்னர் களமிறங்கிய அபிஷேக் சர்மா தனது பங்குக்கு 17 பந்துகளில் அதிரடியாக 32 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். ஹாரி ப்ரூக் ஆரம்பத்தில் காட்டிய அதிரடியை இறுதி வரை தொடர்ந்தார். இறுதிக் கட்டத்தில் கலேசன் 6 பந்துகளில் அதிரடியாக 16 ரன்கள் குவித்தார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி ப்ரூக் 55 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். இந்த ஐபிஎல் சீசனின் முதல் சதம் இதுவாகும்.
இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சன் ரைசர்ஸ் 4 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் குவித்தது. கொல்கத்தா சார்பில் ரசல் 3 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா அணி விளையாடி வருகிறது.