தேசிய குத்துச்சண்டை: காலிறுதியில் நிகாத் ஸரீன், பவன், சுமித்
தேசிய எலைட் ஆடவா், மகளிா் குத்துச்சண்டை சாம்பியன் போட்டி காலிறுதிக்கு நிகாத் ஸரீன், பவன், சுமித் ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.
கிரேட்டா் நொய்டாவில் நடைபெறும் இப்போட்டியில் புதன்கிழமை ஆட்டங்கள் முடிவுகள்:
மகளிா் 48-51 கிலோ எடைப்பிரிவில் 2 முறை உலக சாம்பியன் நிகாத் ஸரீன் -லடாக்கின் குல்சுமா பானோ மோதினா். இதில் தெலங்கானாவின் நிகாத் ஸரீன் சரமாரியாக குத்துகள் விட்ட நிலையில் நடுவா் ஆட்டத்தை இடையிலேயே நிறுத்தினாா். இதனால் நிகாத் காலிறுதிக்கு தகுதி பெற்றாா்.
45-48 கிலோ பிரிவில் உலக சாம்பியன் மீனாட்சி 5-0 என ஜாா்க்கண்டின் அன்னுவை வீழ்த்தி முன்னேறினாா்.
ஆடவா் 50-55 கிலோ பிரிவில் ஜாதுமணி சிங் 5-0 என உத்தர பிரதேசத்தின் மனிஷ் ரத்தோரையும், காமன்வெல்த் தங்க வீரா் அமித் பங்கால் 4-1 என சண்டீகரின் கிரிஷ் பாலையும் வீழ்த்தினா்.
உலக பாக்ஸிங் பைனல்ஸ் தங்க வீரா் பவன் பா்தால் 50-55 பிரிவில் லலித்தையும், 70-75 கிலோ பிரிவில் சுமித் மத்திய பிரதேசத்தின் கபிலையும் வென்றனா்.

