
இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சிறந்த பந்துவீச்சாளர் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
கடந்த 5-6 ஆண்டுகளாக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஐசிசி ரிவ்யூவில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக ரிக்கி பாண்டிங் பேசியதாவது: இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக இந்திய அணியில் நீண்ட நாள்கள் விளையாடவில்லை. ஆனால், அவர் காயங்களிலிருந்து மிகவும் வலிமையாக அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். கடந்த 5-6 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு வடிவிலான போட்டிகளிலும் அவர் சிறந்த பந்துவீச்சாளராக வலம் வருகிறார்.
அவருக்கு எதிராக பேட்டிங் செய்யும் பேட்ஸ்மேன்களிடம் பும்ராவின் பந்துவீச்சு குறித்து கேட்டால், அவர் எந்த அளவுக்கு சிறந்து விளங்குகிறார் என்பது தெரியும். அவரது பந்துவீச்சை கணிக்கவே முடியாது. ஒரு பந்து இன் ஸ்விங் என்றால், அடுத்த பந்து அவுட் ஸ்விங். டி20 உலகக் கோப்பைத் தொடரிலும் இந்திய அணிக்காக அவர் சிறப்பாக செயல்பட்டு 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கிளன் மெக்ராத், ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற வீரர்கள் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு மற்ற வீரர்களிடமிருந்து தனித்துவமாக உள்ளனர். அந்த வரிசையில் பும்ராவும் உள்ளார் என்றார்.