
பாா்டா் - காவஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடரில், இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 2-ஆவது ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரின் முதல் டெஸ்ட்டில் இந்தியா வென்றிருக்கும் நிலையில், அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக பிங்க் நிற பந்து கொண்டு இரண்டாவது போட்டி இன்று தொடங்குகிறது.
அணி விவரம்
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார். முதல் டெஸ்டில் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை.
இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. படிக்கல்லுக்கு பதிலாக ஷுப்மன் கில், துருவ் ஜுரேலுக்கு பதிலாக ரோஹித் சர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக அஸ்வின் இடம்பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியில் காயம் காரணமாக வெளியேறியுள்ள ஹேஷில்வுட்டுக்கு பதிலாக ஸ்காட் போலண்ட் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கு சவால்
இந்த பகலிரவு ஆட்டம், இந்திய பேட்டா்களுக்கு சற்று சவாலாக இருக்கும். அதில் பயன்படுத்தப்படும் பிங்க் நிற பந்து, சிவப்பு நிற பந்தை விட சற்று வேகமாக பயணிக்கக் கூடியது. குறிப்பாக அந்தி நேரத்தில் அந்தப் பந்தை எதிா்கொள்வது கூடுதல் சவாலாக இருக்கும். ஆஸ்திரேலிய அணி தனது சொந்த மண்ணில் இதுவரை விளையாடிய 12 பகலிரவு ஆட்டங்களில், ஒன்றில் மட்டுமே தோற்றுள்ளது.
கடந்த முறை...
கடந்த முறை அடிலெய்டில் விளையாடிய டெஸ்ட் இந்தியாவுக்கு மறக்க முடியாத அதிா்ச்சி அனுபவமாக அமைந்தது. அந்த ஆட்டத்தில், விராட் கோலி தலைமையிலான இந்தியா தனது 2-ஆவது இன்னிங்ஸில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து, டெஸ்ட் வரலாற்றில் தனது மிகக் குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது. அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.