
தில்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் முனாஃப் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடருக்கான ஏலம் தொடங்கவுள்ள நிலையில், தில்லி கேபிடல்ஸ் அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரை நியமித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்த முனாஃப் படேல் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்து கடந்த 2018 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற முனாஃப் படேல், தற்போது தில்லி கேபிடல்ஸ் அணியில் தலைமைப் பயிற்சியாளர் ஹேமங் பதானி மற்றும் கிரிக்கெட் இயக்குநர் வேணுகோபால் ராவுடன் இணைந்து தில்லி கேபிடல்ஸ் அணிக்கு பயிற்சியாளராக செயல்படவுள்ளார்.
இது தொடர்பாக தில்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் அதன் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: வெற்றி பெறும் மனநிலை கொண்ட முனாஃப் படேலை தில்லி கேபிடல்ஸுக்கு வரவேற்கிறோம் எனப் பதிவிட்டுள்ளது.
இந்திய அணிக்காக முனாஃப் படேல் 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை விளையாடியுள்ளார். அனைத்து வடிவிலான போட்டிகளிலும் அவர் இந்திய அணிக்காக 86 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் (2008-2010), மும்பை இந்தியன்ஸ் (2011-2013) மற்றும் குஜராத் லயன்ஸ் (2017) அணிகளுக்காக முனாஃப் படேல் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.