
யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில்லுக்கு எதிராக திட்டங்களை வகுப்பதே தங்களது நோக்கமாக இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார்.
பார்டர் - கவாஸ்கர் கோப்பை
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடர் நவம்பரில் தொடங்குகிறது.
கடந்த 2018-19 மற்றும் 2020-21 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை இந்திய அணி தொடர்ச்சியாக கைப்பற்றி அசத்தியது. ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இவர்கள் இருவரை கட்டுப்படுத்த வேண்டும்
இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில் இருவரையும் கட்டுப்படுத்துவதே தங்களது இலக்காக இருக்குமென ஜோஸ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியில் புதிதாக இணைந்துள்ள வீரர்களை கட்டுப்படுத்துவதில் நாங்கள் அதிக கவனம் கொடுக்க வேண்டும். அதற்கேற்றவாறு திட்டங்களை வகுக்க வேண்டும். யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில்லுக்கு எதிராக நாங்கள் அதிகம் விளையாடியது கிடையாது. விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் பிற வீரர்களுக்கு எதிராக பல ஆண்டுகளாக விளையாடியிருக்கிறோம். அதனால், அவர்களுக்கு எதிராக எப்படி செயல்பட வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும் என்றார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற நவம்பர் 22 ஆம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.