
உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை பிசிசிஐ கட்டாயமாக்கியுள்ளது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான் பேசியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரான ஷிகர் தவான் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் விளம்பர தூதர்களில் ஒருவராக உள்ளார். துபையில் நேற்று (பிப்ரவரி 23) நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை ஷிகர் தவான் நேரில் கண்டுகளித்தார்.
இந்தப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. போட்டி நிறைவடைந்த பிறகு, இந்திய வீரர்களை சந்தித்த ஷிகர் தவான் அவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
நல்ல முடிவு, ஆனால்...
இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் இடையே ஷிகர் தவானிடம், இந்திய வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதை பிசிசிஐ கட்டாயமாக்கியுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
பிசிசிஐ-ன் முடிவு குறித்த கேள்விக்கு ஷிகர் தவான் கூறியதாவது: உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை பிசிசிஐ கட்டாயமாக்கியுள்ளது மிகவும் நல்ல முடிவு. பிசிசிஐ-ன் இந்த முடிவில் ஒரு விஷயம் மட்டும் கவனிக்கப்பட வேண்டும். வீரர்களின் பணிச்சுமையை மிகவும் அதிகப்படுத்திவிடக் கூடாது. தற்போது இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது மிகவும் சிறப்பான விஷயம். விராட் கோலியும் அண்மையில் ரஞ்சி போட்டியில் விளையாடினார். வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதை உறுதி செய்யும் அதே நேரத்தில், அவர்களுக்கு போதிய அளவுக்கு ஓய்வும் அளிக்கப்பட வேண்டும் என்றார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் கடந்த ஆண்டு சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.