
இங்கிலாந்துக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 290 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான இரண்டாவது ஒருநாள் போட்டி நார்த்தாம்டனில் இன்று (ஜூன் 30) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.
சூர்யவன்ஷி அசத்தல்; 291 ரன்கள் இலக்கு
முதலில் விளையாடிய இந்திய அணி 49 ஓவர்களில் 290 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் ஆயுஷ் மாத்ரே அவர் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன் பின், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷியுடன் விஹான் மல்ஹோத்ரா ஜோடி சேர்ந்தார். இந்த இணை சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தது.
முதல் ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடியதைப் போன்று, இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடினார். அதிரடியாக விளையாடிய அவர் 34 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
நிதானமாக விளையாடிய விஹான் மல்ஹோத்ரா 68 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும். ராகுல் குமார் (47 ரன்கள்), கனிஷ்க் சௌகான் (45 ரன்கள்), அபிக்யான் குண்டு (32 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து தரப்பில் ஏஎம் பிரெஞ்ச் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜாக் ஹோம் மற்றும் அலெக்ஸ் கிரீன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
291 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.
Batting first, India scored 290 runs in the second Under-19 ODI against England.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.