

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 411 ரன்கள் எடுத்துள்ளது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
வைபவ் சூர்யவன்ஷி அபார ஆட்டம்; இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு!
டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 411 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக வைபவ் சூர்யவன்ஷி மற்றும் ஆரோன் ஜார்ஜ் களமிறங்கினர். ஆரோன் ஜார்ஜ் 9 ரன்களில் ஆட்டமிழக்க, வைபவ் சூர்யவன்ஷியுடன் கேப்டன் ஆயுஷ் மாத்ரே ஜோடி சேர்ந்தார். ஆயுஷ் மாத்ரே நிதானமாக விளையாட, வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களை திணறடித்தார்.
நிதானமாக விளையாடிய கேப்டன் ஆயுஷ் மாத்ரே 51 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 55 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அவர் 80 பந்துகளில் 175 ரன்கள் எடுத்தார். அதில் 15 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்கள் அடங்கும்.
அதன் பின், வேதாந்த் திரிவேதி 32 ரன்கள், விஹான் மல்ஹோத்ரா 30 ரன்கள், அபிக்யான் குண்டு 40 ரன்கள், ஆர்எஸ் அம்பிரிஷ் 18 ரன்கள் மற்றும் கனிஷ்க் சௌகான் 37* ரன்கள் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் மிண்டோ 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். செபஸ்டியன் மோர்கன் மற்றும் அலெக்ஸ் கிரீன் தலா இரண்டு விக்கெட்டுகளையும், லம்ஸ்டன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
412 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.