

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்-பாஸ் லீக் தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டியைப் போன்று ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்-பாஸ் தொடர் மிகவும் பிரபலம்.
இந்தத் தொடர் வருகிற டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் விளையாடுவதற்காக சிட்னி தண்டர் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் ஆகியிருந்தார்.
இந்த நிலையில், அஸ்வின் தன்னுடைய முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தத் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக பிக்-பாஸ் கிரிக்கெட் லீக் நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
சமீபத்தில், டெஸ்ட் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த அஸ்வின் பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடவுள்ளதாக விருப்பம் தெரிவித்திருந்தார். அதன்பின்னர், அவர் பிக்பாஸ் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு, லெஜண்ட்ஸ் லீக்கில் பெயரைப் பதிவு செய்திருந்தார்.
லெஜண்ட்ஸ் லீக்குக்கான ஏலத்தில் அஸ்வினை யாரும் எடுக்க முன்வரவில்லை. இதனால், பிக்-பாஸ் லீக்கில் முழுமையாக விளையாட அஸ்வின் முடிவெடுத்திருந்தார்.
முன்னதாக, இந்தியாவின் உன்முக் சந்த், உள்ளூர் போட்டிகளில் விளையாடிய நிகில் சௌத்ரி உள்ளிட்டோர் பிபிஎல் தொடரில் விளையாடியிருந்தாலும், உன்முக் சந்த் அமெரிக்க வீரராகவும், நிகில் சௌத்ரி ஆஸ்திரேலியாவின் உள்ளூர் வீரராகவுமே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர்.
பிக்-பாஸ் லீக்கில் விளையாடவிருக்கும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெறுவார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.