
உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 251 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வர்ட் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.
ரிச்சா கோஷ் அதிரடி; 252 ரன்கள் இலக்கு
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரதீகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா களமிறங்கினர். இந்த இணை இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தைத் தந்தது. இருப்பினும், ஸ்மிருதி மந்தனா 23 ரன்களிலும், பிரதீகா ராவல் 37 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதன் பின், ஹர்லீன் தியோல் (13 ரன்கள்), ஹர்மன்பிரீத் கௌர் (9 ரன்கள்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (0 ரன்), தீப்தி சர்மா (4 ரன்கள்), அமன்ஜோத் கௌர் (13 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போதிலும், ரிச்சா கோஷ் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். அதிரடியாக விளையாடிய அவர் 6 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவர் 77 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 11 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். ஸ்நே ராணா 24 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும்.
இறுதியில் இந்திய அணி 49.5 ஓவர்களின் முடிவில் 251 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
தென்னாப்பிரிக்கா தரப்பில் சோல் டிரையான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மாரிஸேன் காப், நடின் டி கிளர்க் மற்றும் நான்குலுலேகோ மிலாபா தலா இரண்டு விக்கெட்டுகளையும், டுமி செக்குன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.