

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (அக்டோபர் 29) நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்தது. இப்ராஹிம் ஸத்ரான் அதிரடியாக 33 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ரஹ்மனுல்லா குர்பாஸ் 39 ரன்களும், அஸ்மதுல்லா 27 ரன்களும் எடுத்தனர்.
ஜிம்பாப்வே தரப்பில் சிக்கந்தர் ராஸா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். பிளெஸ்ஸிங் முஸராபானி 2 விக்கெட்டுகளையும், பிராட் ஈவன்ஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
வெற்றியுடன் தொடங்கிய ஆப்கானிஸ்தான்
181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 16.1 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், 53 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக டினோடெண்டா மபோசா 15 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பிரையன் பென்னட் மற்றும் பிராட் ஈவன்ஸ் தலா 24 ரன்களும், டோனி முனியோங்கா 20 ரன்களும் எடுத்தனர்.
ஆப்கானிஸ்தான் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய முஜீப் உர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அஸ்மதுல்லா ஓமர்சாய் 3 விக்கெட்டுகளையும், அப்துல்லா அகமதுசாய் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.