

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 197 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
டி20 உலக கோப்பை தொடரின் 10-ஆவது சீசன் பிப்ரவரி 7 கோலாகலமாகத் தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரில், மொத்தம் 20 அணிகள் குரூப் ஏ முதல் டி வரை ஒரு குரூப்புக்கு தலா 5 அணிகள் வீதம் பிரிக்கப்பட்டு போட்டி நடைபெறுகிறது. சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் அணிகள் தீவிரமாக விளையாடி வருகின்றன.
இந்தத் தொடரில் லீக் சுற்றின் 15-வது ஆட்டத்தில் இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி மும்பை வான்கடே திடலில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக், மேற்கிந்தியத் தீவுகள் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்படி, முதல் பேட்டிங் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் பிரண்டன் கிங் ஒரு ரன்னிலும், கேப்டன் ஷாய் ஹோப் ரன் ஏதுமின்றியும் ஷிம்ரன் ஹெட்மையர் அதிரடியாக விளையாடி 2 பௌண்டரி, 2 சிக்ஸர்களுடன் 23 ரன்களும் எடுத்தனர்.
அவர்களைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய, ரோஸ்டன் சேஸ் 6 பௌண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்து விக்கெட்டைப் பறிகொடுக்க, மறுமுனையில் விக்கெட் இழக்காமல் அதிரடியாக சிக்ஸர் மழைப் பொழிந்தார் ஷெர்ஃபைன் ரூதர்போர்ட்.
42 பந்துகளில் 2 பௌண்டரி, 7 சிக்ஸர்களுடன் 76 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்த ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் 17 பந்துகளில் ஒரு பௌண்டரி, 4 சிக்ஸர்களுடன் 33 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் பெவிலியன் திரும்பினார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணித் தரப்பில் ஜேமி ஓவர்டன், ஆதில் ரஷீத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், சாம் கரன், ஜோஃப்ரா ஆர்ச்சர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர், 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.