

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் தில்லி அருண் ஜெட்லி திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் நமீபியா அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடி வருகிறது.
அதிவேகமாக 100 ரன்கள் குவித்து சாதனை!
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். இந்த இணை அதிரடியாக விளையாடியது. இருப்பினும், சஞ்சு சாம்சன் 8 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
அதன் பின், இஷான் கிஷனுடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இஷான் கிஷன் அதிரடியில் மிரட்ட திலக் வர்மா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் பவர் பிளேவின் கடைசி ஓவரில் தொடர்ச்சியாக நான்கு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி அசத்தினார். அவர் 20 பந்துகளில் அதிரடியாக அரைசதம் விளாசி அசத்தினார்.
இந்திய அணி 6.5 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்து சாதனை படைத்தது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக 100 ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.
இதற்கு முன்பாக, கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி 7 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்திருந்ததே இதுவரையிலான அதிவேகமானதாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.