

டி20 உலகக் கோப்பை விவகாரத்தில் ஐசிசியின் அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டோம் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறவுள்ளது. உலகக் கோப்பைத் தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகி வரும் நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசம் பங்கேற்குமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறையைக் கண்டித்து பிசிசிஐ-ன் அறிவுறுத்தலின் பேரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் முஸ்தபிசூர் ரஹ்மான் நீக்கப்பட்டார். இதனையடுத்து, இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேச அணி பங்கேற்காது எனவும், போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் எனவும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் ஐசிசியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அட்டவணை தயாராகிவிட்டதால் வங்கதேச அணிக்கான போட்டிகளை இலங்கைக்கு மாற்றுவது சிக்கலான காரியம் எனவும், இந்தியாவில் டி20 உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்பது குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் நாளைக்குள் (ஜனவரி 21) முடிவெடுக்க வேண்டும் எனவும் ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வங்கதேச அணி இந்தியாவில் விளையாட மறுக்கும் பட்சத்தில், தரவரிசை அடிப்படையில் வங்கதேசத்துக்குப் பதிலாக மாற்று அணியாக டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஸ்காட்லாந்து இடம்பெறும் எனவும் எச்சரிக்கப்பட்டது.
அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டோம்
இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்பது குறித்து நாளைக்குள் முடிவெடுக்க வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு ஐசிசி அவகாசம் கொடுத்திருக்கும் நிலையில், ஐசிசியின் அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டோம் என வங்கதேச அரசின் விளையாட்டுத் துறை ஆலோசகர் ஆசிஃப் நஸ்ருல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது: டி20 உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசத்துக்குப் பதிலாக ஸ்காட்லாந்து மாற்று அணியாக சேர்க்கப்படும் என்பது எனக்குத் தெரியவில்லை. பிசிசிஐ தரும் அழுத்தத்தின் காரணமாக ஐசிசி எங்களுக்கு அழுத்தம் தர முயற்சித்தால் நாங்கள் அதற்கு அடிபணிய மாட்டோம். எந்த ஒரு காரணமுமின்றி ஐசிசி வைக்கும் நிபந்தனைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
கடந்த காலங்களில் பாகிஸ்தான் அணி இந்தியாவில் கிரிக்கெட் தொடர்களில் விளையாட மாட்டோம் எனக் கூறியதால், போட்டி நடத்தப்படும் இடங்களை ஐசிசி மாற்றியது. அதன் அடிப்படையில், வங்கதேசத்தின் நியாயமான கோரிக்கையை ஏற்று வங்கதேச அணிக்கான போட்டி நடைபெறும் இடங்களை ஐசிசி மாற்றித் தர வேண்டும் என்றார்.
வங்கதேச அணி வீரர்கள் டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டால், அவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் கூறி வரும் நிலையில், வங்கதேச அணியின் பாதுகாப்புக்கு எந்த ஒரு அச்சுறுத்தலும் இருப்பதாகத் தெரியவில்லை என ஐசிசி மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.