நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி கயானாவில் உள்ள புராவிடென்ஸ் திடலில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 49.5 ஓவர்களில் 267 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 73 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, வில் யங் 49 ரன்கள், மைக்கேல் பிரேஸ்வெல் 29 ரன்கள், ஹென்றி நிக்கோல்ஸ் மற்றும் மார்க் சாப்மேன் தலா 27 ரன்கள் எடுத்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். விடல் லாஸ் 3 விக்கெட்டுகள், குடகேஷ் மோட்டி இரண்டு விக்கெட்டுகள் மற்றும் காரி பியர் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
கீஸி கார்ட்டி, சாய் ஹோப் அதிரடி!
268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 48.5 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கீஸி கார்ட்டி அதிகபட்சமாக 112 பந்துகளில் 95 ரன்கள் எடுத்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். 5 ரன்களில் சதம் விளாசும் வாய்ப்பை அவர் தவறவிட்டார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் சாய் ஹோப் 92 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அக்கிம் அகஸ்டி 38 ரன்கள், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 22 ரன்கள் எடுத்தனர்.
நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி, ஜேடன் லென்னாக்ஸ் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
Summary
The West Indies team won the first ODI against New Zealand by 7 wickets.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










