ரஷிய உலகக் கோப்பை போட்டியிலும் வெல்ல முடியவில்லை என்றால் மெஸ்ஸி ஓய்வு பெற்றுவிடுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இதை மறுத்துள்ளார் அர்ஜென்டீனா பயிற்சியாளர் ஜார்ஜ் சம்போலி.
குரூப் டி பிரிவில் இடம் பெற்றுள்ள முன்னாள் சாம்பியனான ஆர்ஜென்டீனா, 1978, 1986 ஆண்டுகளில் உலகக் கோப்பையை வென்றது. தற்போது நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி இடம் பெற்ற நிலையில் கடந்த 2014 உலகக் கோப்பையில் இறுதிச் சுற்று வரை முன்னேறியது. மேலும் 2015, 2016 கோபா அமெரிக்க போட்டியிலும் தோல்வியைத் தழுவியது.
ஆர்ஜென்டீனா பயிற்சியாளர் ஜார்ஜ் சம்போலி கூறியதாவது: உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடுவதில் மெஸ்ஸி மிக ஆர்வமாக உள்ளார். சர்வதேச ஆட்டங்களிலிருந்து எப்போது ஓய்வு பெற வேண்டும் என்கிற முடிவை அவரே எடுப்பார். இது அவருடைய கடைசி உலகக் கோப்பை என நான் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.