ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து பஞ்சாப் அணி வீரர் கிறிஸ் கெயில் திடீரென விலகியுள்ளார்.
ஐபிஎல் 2021 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் பிரபல வீரர் கிறிஸ் கெயில். இந்த வருடப் போட்டியில் 10 ஆட்டங்களில் விளையாடி 193 ரன்கள் எடுத்துள்ளார். புள்ளிகள் பட்டியலில் பஞ்சாப் அணி 8 புள்ளிகளுடன் 6-ம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து விலக முடிவெடுத்து கரோனா தடுப்பு வளையத்தை விட்டு வெளியேறியிருக்கிறார் கிறிஸ் கெயில். திடீரென அவர் எடுத்த இந்த முடிவு பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கெயில் கூறியதாவது:
கடந்த சில மாதங்களாக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காகவும் சிபிஎல், ஐபிஎல் போட்டிகளுக்காகவும் கரோனா தடுப்பு வளையத்தில் இருந்துள்ளேன். என்னை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள எண்ணுகிறேன். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு உதவுவதில் கவனம் செலுத்த வேண்டும். இதனால் துபையில் நான் இடைவேளை எடுத்துக்கொள்கிறேன். எனக்கு ஓய்வளிக்க சம்மதம் தெரிவித்த பஞ்சாப் அணிக்கு நன்றி என்று கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.