தன்னுடைய சகோதரியின் உதவியால் கிரிக்கெட் ஆட்டங்களில் நன்றாக விளையாடியதாக சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் செளத்ரி கூறியுள்ளார்.
நவி மும்பையில் நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. திலக் வர்மா 51 ரன்கள் எடுத்தார். சிஸ்கேவின் முகேஷ் செளத்ரி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துக் கடைசிப் பந்தில் வெற்றியைப் பெற்று சென்னை ரசிகர்களைக் குஷிப்படுத்தியது. கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் உனாட்கட் ஓவரில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கேவுக்கு இந்த வருடத்தின் 2-வது வெற்றியை அளித்தார் தோனி. ராயுடு 40 ரன்களும் உத்தப்பா 30 ரன்களும் தோனி ஆட்டமிழக்காமல் 28 ரன்களும் எடுத்தார்கள்.
சிறப்பாகப் பந்துவீசிய முகேஷ் செளத்ரி, ஆட்ட நாயகனாகத் தேர்வானார். ஒரு பேட்டியில் முகேஷ் செளத்ரி கூறியதாவது:
எனது பயணம் கடினமானது. என் குடும்பத்தினர் மிகவும் ஆதரவளித்தார்கள். நான் புணேவில் தனியாக இருந்தபோது என் சகோதரி எனக்குப் பெரிதும் உதவினார். உணவளிப்பது, மனத்தளவில் சோர்வாகாமல் பார்த்துக்கொள்வது என எல்லாவகையிலும் உதவினார். நான் உற்சாகமின்றி இருக்கும்போது என்னை வலுக்கட்டாயமாக மைதானத்துக்கு அனுப்புவார். அவர் இல்லாமல் என்னால் கிரிக்கெட் ஆட்டங்களில் நன்றாக விளையாடியிருக்க முடியாது. நான் ஓர் அணிக்குத் தேர்வானாலும் அடுத்தக்கட்டம் குறித்து என்னை யோசிக்கச் சொல்வார் என்று கூறினார்.