குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல்-இன் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனைத்தொடர்ந்து முதலில் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். சுப்மான் கில் ஒரு ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வேட் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சஹா பெரிய இன்னிங்ஸை ஆடுவதற்கான அடித்தளத்தை அமைத்தார். ஆனால், அவர் 31 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தார். 19-வது ஓவரில் பவுண்டரி அடித்த பாண்டியா 41-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். மில்லர் 34 ரன்களுக்கும், தெவாடியா 2 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் குஜராத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. பாண்டியா 47 பந்துகளில் 62 ரன்களும், ரஷித் கான் 6 பந்துகளில் 19 ரன்களும் எடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான விராட் கோலி, டூபிளெஸ்ஸி ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விராட் கோலி அரை சதம் கடந்த நிலையில், டூபிளெஸ்ஸி ரஷித் கான் வீசிய பந்தில் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல்லும் கோலியுடன் அதிரடி காட்டினார். இதனிடையே அணியின் ரன்கள் பட்டியலை உயர்த்திய விராட் கோலி 54 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளை விளாசினார். அதனைத் தொடர்ந்து தினேஷ் கார்த்திக் களமிறங்கினார்.
மேக்ஸ் வெல் ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் சேர்த்தார். இதனால் 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்களை எடுத்து பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் பிளே ஆப் சுற்றை பெங்களூரு அணி தக்க வைத்துள்ளது.