

ஐபிஎல் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் 44 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த தில்லி அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் அடித்தது. பிருத்வி ஷா 51, வார்னர் 61 ரன்கள் எடுத்தார்கள். அடுத்து விளையாடிய கொல்கத்தா 19.4 ஓவர்களில் 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஷ்ரேயஸ் ஐயர் 54 ரன்கள் எடுத்தார். 4 விக்கெட்டுகள் எடுத்த தில்லி வீரர் குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் ஆனார்.
இந்த ஆட்டத்தில் தில்லி இன்னிங்ஸில் சர்ஃபராஸ் கான் களமிறங்கவில்லை. அவருக்கு முன்னால் ஆல்ரவுண்டர்களான அக்ஷர் படேலும் ஷர்துல் தாக்குரும் களமிறங்கினார்கள்.
இதையடுத்து சர்ஃபராஸ் கான் களமிறங்காதது பற்றி தில்லி கேப்டன் ரிஷப் பந்த் கூறியதாவது:
ரன்கள் எடுத்துக்கொண்டிருக்கும் நிலை தொடரவேண்டும் என நினைத்தோம். நாங்கள் விக்கெட்டுகளை இழந்தாலும் கடைசியில் சர்ஃபராஸ் கான் இருப்பார் என்று தெரியும். அதனால் அவருக்கு முன்பு அக்ஷர் படேல், ஷர்துல் தாக்குரை பேட்டிங் செய்ய அனுப்பினோம் என்றார்.
இதற்கு முன்பு, லக்னெள அணிக்கு எதிரான ஆட்டத்தில் 36 ரன்கள் எடுத்தார் சர்ஃபராஸ் கான். நேற்றைய ஆட்டத்தில் ஷர்துல் தாக்குரும் அக்ஷர் படேலும் கடைசி 12 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்கள். இதனால் தில்லி அணியால் 215 ரன்கள் எடுத்து வெற்றி பெற முடிந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.