கடைசிப் பந்து வரை தோனி விளையாடினால் வெற்றி நிச்சயம்: நம்பிக்கை வைத்த ஜடேஜா

கடைசிப் பந்து வரை தோனி விளையாடினால் வெற்றி நிச்சயம்: நம்பிக்கை வைத்த ஜடேஜா

நாங்கள் மிகவும் பதற்றத்துடன் இருந்தோம்.

கடைசிப் பந்து வரை தோனி விளையாடினால் வெற்றி நிச்சயம் என நம்பிக்கை வைத்ததாக சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா கூறியுள்ளார். 

மும்பையில் நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. திலக் வர்மா 51 ரன்கள் எடுத்தார். சிஸ்கேவின் முகேஷ் செளத்ரி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துக் கடைசிப் பந்தில் வெற்றியைப் பெற்று சென்னை ரசிகர்களைக் குஷிப்படுத்தியது. கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் உனாட்கட் ஓவரில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கேவுக்கு இந்த வருடத்தின் 2-வது வெற்றியை அளித்தார் தோனி. ராயுடு 40 ரன்களும் உத்தப்பா 30 ரன்களும் தோனி ஆட்டமிழக்காமல் 28 ரன்களும் எடுத்தார்கள். சிறப்பாகப் பந்துவீசிய முகேஷ் செளத்ரி, ஆட்ட நாயகனாகத் தேர்வானார். 

ஆட்டத்துக்குப் பிறகு சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா கூறியதாவது:

ஆட்டம் செல்லும் விதம் பார்த்து நாங்கள் மிகவும் பதற்றத்துடன் இருந்தோம். ஒருகட்டத்தில், இலக்கை வெற்றிகரமாக முடிக்கும் வீரர் ஆடுகளத்தில் உள்ளார், அவர் கடைசிப் பந்து வரை விளையாடினால் அவரால் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவைக்க முடியும் என நம்பினோம். நான் இன்னமும் அதே பலத்துடன் உள்ளேன், என்னால் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்பதை உலகுக்குக் காண்பித்து விட்டார் தோனி. எங்கள் அணியில் மூத்த வீரர்கள் உள்ளார்கள். அதனால் எப்போது சரியாக விளையாட வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் தான் நாங்கள் தோல்வியடையும்போதும் நிதானமாக இருந்தோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com