எங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை: ஆர்சிபியுடன் தோற்றது பற்றி மெக்குல்லம்

விரைவாக ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற முனைப்புடன் விளையாடிய எங்கள் வீரர்களைப் பாராட்டுகிறேன்.
எங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை: ஆர்சிபியுடன் தோற்றது பற்றி மெக்குல்லம்

ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற எங்களுக்கு அதிர்ஷ்டம் கைகூடவில்லை என கேகேஆர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மெக்குல்லம் கூறியுள்ளார்.

நவி மும்பையில் நடைபெற்ற ஆர்சிபி - கேகேஆர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டத்தில் ஆர்சிபி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 18.5 ஓவர்களில் 128 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆண்ட்ரே ரஸ்ஸல் மட்டும் அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார். கடைசி விக்கெட்டுக்கு உமேஷ் யாதவும் வருண் சக்ரவத்தியும் 27 ரன்கள் எடுத்து ஓரளவு கெளரவமான ஸ்கோரை அளித்தார்கள். வனிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளும் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். 

எளிதான இலக்கை விரட்டுவதற்குள் ஆர்சிபி அணிக்குப் போதும் போதுமென்றாகிவிட்டது. விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்ததால் கடைசி ஓவரில் தான் இலக்கை விரட்டியது. ரூதர்ஃபோர்ட் 28, ஷபாஸ் அகமது 27 ரன்கள் எடுத்தார்கள். கடைசியில் வந்த தினேஷ் கார்த்திக் 7 பந்துகளில் 1 சிக்ஸர் 1 பவுண்டரியுடன் 14 ரன்கள் எடுத்து ஆர்சிபி அணியை வெற்றி பெறச் செய்தார். டிம் செளதி 3 விக்கெட்டுகளும் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

ஆட்டம் முடிந்த பிறகு கேகேஆர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மெக்குல்லம் கூறியதாவது:

விரைவாக ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற முனைப்புடன் விளையாடிய எங்கள் வீரர்களைப் பாராட்டுகிறேன். கூடுதலாக ஒரு பேட்டர் இருந்ததால் அதைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். இவ்வளவு சீக்கிரம் ஆட்டமிழப்போம் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த ஆட்டத்தில் எங்களுக்கு நிறைய அதிர்ஷ்டம் அமையவில்லை. அதிரடியாக ஷாட் ஆடியபோது பந்து ஃபீல்டரிடம் தான் சென்றது. இதனால் எண்ணியபடி ஆட்டம் அமையவில்லை. சிலநேரங்களில் இப்படி நடக்கும். தோல்வியடைந்தாலும் விரைவாக ரன்கள் குவிக்கும் மனநிலையுடனே எங்கள் அணி விளையாட வேண்டும். கடந்த வருடம் அந்த மனநிலை தான் உதவியது. அதன்படி தான் ஏலத்தில் வீரர்களைத் தேர்வு செய்தோம். ஆடுகளத்தின் எகிறும் தன்மையை விரோதியாகக் கருதாமல் நண்பனாக எண்ண வேண்டும். கொஞ்சம் யோசனையுடன் விளையாடினால் எங்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகும். எங்கள் அணியின் பந்துவீச்சாளர்களில் ஒருவர் வெங்கடேஷ் ஐயர். கூடுதலாக ஒரு பேட்டருடன் விளையாடும்போது ரஸ்ஸல், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா ஆகிய மூவரும் 4 ஓவர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com