தில்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த், அணி வீரர்களுக்கு பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது.
நேற்று இரவு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 272 ரன்கள் எடுக்க, தில்லி அணி 17.2 ஓவா்களில் 166 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. 106 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆர் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் பந்து வீசிய தில்லி அணி மிகவும் மெதுவாக பந்து வீசியதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது இந்த ஐபிஎல் தொடரில் தில்லிக்கு 2-ஆவது முறையாகும். சிஎஸ்கே அணிக்கு எதிராக தில்லி அணிக்கு ஏற்கனவே முதல் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது 2ஆவது முறை என்பதால் ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அணியின் வீரர்கள், இம்பாக்ட் வீரர் (அபிஷேக் போரல்) உள்பட அனைவருக்கும் போட்டியின் சம்பளத்தில் இருந்து 25 சதவிகிதம் அல்லது ரூ.6 லட்சம் அபராதம். இதில் எது குறைவானதோ அந்தளவுக்கு அணியின் வீரர்களுக்கு அபராதம் செல்லுபடியாகுமென பிசிசிஐ தெரிவித்துள்ளது.
3ஆவது முறையாக மெதுவாக பந்து வீசினால் என்ன ஆகும்?
ரூ.30 லட்சம் அபராதத்துடன் கேப்டன் ஒரு போட்டியில் இருந்து நீக்கப்படுவார். மற்ற வீரர்களுக்கு ரூ.12 லட்சம் அல்லது போட்டியின் சம்பளத்தில் இருந்து 50 சதவிகிதம். இதில் எது குறைவானதோ அவ்வளவு அபராதம் விதிக்கப்படும்.