ஐபிஎல் தொடரின் 16-ஆவது போட்டியான தில்லி- கொல்கத்தா போட்டியில் இஷாந்த் சர்மா வீசிய யார்க்கர் பெரிதும் கவனிக்கப்பட்டு வருகிறது.
கேகேஆர் அணி 19 ஓவர் முடிவில் 264 ரன்கள் எடுத்திருந்தது. ரஸ்ஸெல் 18 பந்துகளில் 41 ரன்கள் எடுத்திருந்தார். 20 ஓவரினை இஷாந்த் சர்மா வீச வந்தார். கொல்கத்தா அணி உள்பட கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஹைதராபாத்தின் (277) அதிகபட்ச ரன்களை கடந்துவிடும் என நினைத்து இருந்தார்கள். ஆனால், நடந்தது வேறு.
144 கி.மீ./மணி வேகத்தில் யார்க்கர் பந்தினை வீசினார் இஷாந்த சர்மா. அந்தப் பந்து ஆண்ட்ரே ரஸ்ஸெல்லின் காலுக்கு அருகில் விழுந்து ஸ்டம்பினை வீழ்த்தியது. ஆண்ட்ரே ரஸ்ஸெல் நிலைதடுமாறி கீழே விழுந்தார். பின்னர் நடந்து செல்லும்போது இஷாந்த் ஷர்மாவின் யார்க்கர் பந்துவீச்சினை பாராட்டி சென்றார்.
நல்ல கிரிக்கெட் வீரர் மற்றொரு வீரரை பாராட்டுவார். இந்த விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முதலில் கொல்கத்தா 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 272 ரன்கள் எடுக்க, தில்லி 17.2 ஓவா்களில் 166 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.