மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய கிரிக்கெட் அகாடெமியில் அனைத்து உடல் தகுதிகளிலும் தேர்ச்சி பெற்றதால், அவர் விரைவில் மும்பை அணிக்காக களமிறங்குவார் எனக் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேசிய கிரிக்கெட் அகாடெமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சூர்யகுமார் அனைத்து உடல் தகுதி தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுவிட்டார். ஆனால், அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதற்காக மேற்கொள்ளப்படும் கட்டாய தேர்வுகள் மட்டும் சில உள்ளன. அதிலும் அவர் தேர்ச்சி பெற்றுவிட்டால், மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதில் எந்த பிரச்னையும் இல்லை. எந்த ஒரு பிரச்னையுமின்றி அவர் நன்றாகவே பேட்டிங் செய்கிறார். மும்பை அணிக்காக அடுத்தப் போட்டியில் சூர்யகுமார் விளையாடுவாரா என்பது நாளை நடத்தப்பட உள்ள தேர்வு முடிவுகளில் தெரிந்துவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் வருகிற ஏப்ரல் 7 ஆம் தேதி வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள தனது அடுத்தப் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் மும்பை அணிக்காக நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.