நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 272 ரன்கள் எடுக்க, தில்லி அணி 17.2 ஓவா்களில் 166 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. 106 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆர் அபார வெற்றி பெற்றது.
போட்டி முடிந்த பிறகு தில்லி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தோல்வி குறித்து வருத்தமாக பேசியுள்ளார். அவர் பேசியதாவது:
போட்டி குறித்து ஆராய்வது தற்போது கடினமாக இருக்கிறது. இந்தப் போட்டியின் முதல் பாதியைக் குறித்து மிகவும் அவமானமாகக் கருதுகிறேன். இவ்வளவு ரன்கள் கொடுத்திருக்கக் கூடாது. 17 (வைட்) எக்ஸ்ட்ராஸ் பந்துகள் வீசியது எங்களை இன்னும் 2 ஓவர் அதிகமாக வீச வைத்து மொத்தமாக 2 மணி நேரமாக்கியது. அதனால் கடைசி 2 ஓவர்களில் பவுண்டரிகளில் 4 ஃபீல்டர்கள் மட்டுமே நிற்க வைக்க முடிந்தது.
ஏற்றுக் கொள்ள முடியாத பல விஷயங்கள் நடந்துவிட்டன. இந்த இரவே ஒரு அணியாக இது குறித்து பேசி சரிசெய்து தொடரில் முன்னோக்கி செல்ல வேண்டும். ஓய்வறையில் நிச்சயமாக சில வெளிப்படையான நல்ல விவாதங்கள் நடைபெறும்.
நான் ரிஷப் பந்த்திடம் இது குறித்து பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. ரிஷப் கூறிய சில விஷயங்களை பவுலர்கள் ஃபீல்டர்கள் சில சமயம் கேட்கவில்லை. ஆனால், இதெல்லாம் சிறிய விஷயங்கள்தான். 2 போட்டிகளில் 2 ஓவர்கள் அதிகமாக வீசியிருக்கிறோம். வேறு எந்த அணியும் இப்படி செய்யவில்லை. அதனால் 10 நிமிடங்களுக்கு மேல் கடைசி 2 ஓவர்களில் எங்களுக்கு பாதிக்கப்பட்டது என்றார்.