சன் ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிராக முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சென்னை முதலில் பேட் செய்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். ரச்சின் ரவீந்திரா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அஜிங்க்யா ரஹானே ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. இருப்பினும், ருதுராஜ் கெய்க்வாட் 26 ரன்களிலும், அஜிங்க்யா ரஹானே 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
களமிறங்கியது முதலே அதிரடியாக விளையாடிய ஷிவம் துபே 24 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். இதனையடுத்து, ரவீந்திர ஜடேஜா மற்றும் டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்தனர். டேரில் மிட்செல் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். ரவீந்திர ஜடேஜா 31 ரன்களுடனும், மகேந்திர சிங் தோனி 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே 165 ரன்கள் எடுத்தது. சன் ரைசர்ஸ் தரப்பில் புவனேஸ்வர் குமார், நடராஜன், பாட் கம்மின்ஸ், ஷபாஸ் அகமது மற்றும் ஜெயதேவ் உனத்கட் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் விளையாடி வருகிறது.