டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம்பெற வேண்டுமென மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக விளையாடியது. விராட் கோலி சதமடித்த போதிலும், அந்தப் போட்டியில் பெங்களூரு அணியால் வெற்றி பெற முடியவில்லை. சதம் அடிப்பதற்கு விராட் கோலி அதிக பந்துகள் எடுத்துக் கொண்டது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம்பெற வேண்டுமென மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பேட்ஸ்மேன்கள் களமிறங்கும் இடத்தைப் பொறுத்து அவர்களது ஸ்டிரைக் ரேட் அமையும். தொடக்க ஆட்டக்காரர் 130 - 140 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுவது தவறு எனக் கூறமுடியாது. ஆனால், நீங்கள் மிடில் ஆர்டரில் களமிறங்கினால் 150 அல்லது 160 ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாட வேண்டியிருக்கும்.
விராட் கோலியை போன்ற தொடக்க ஆட்டக்காரர்கள் 130 ஸ்டிரைக் ரேட்டில் தொடங்கி 160 ஸ்டிரைக் ரேட்டில் முடிப்பதை குறை கூற முடியாது. இந்த ஸ்டிரைக் ரேட்டை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் விராட் கோலி உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வேண்டும். உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் டாப் ஆர்டரில் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் விளையாட வேண்டும் என்றார்.
உலகக் கோப்பைத் தொடர் வருகிற ஜூன் 1 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது