லக்னௌ அணியின் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 33 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது. இப்போட்டியில் லக்னௌ அணியின் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் ஒரு ஓவர் மட்டுமே வீசினார். அதன்பின், தசை வலியின் காரணமாக அவர் பெவிலியன் திரும்பினார். அதன்பின் அவர் பந்துவீச வரவில்லை.
இந்த நிலையில், மயங்க் யாதவ் அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு க்ருணால் பாண்டியா பேசியதாவது: மயங்க் யாதவிடம் பேசினேன். அவர் நன்றாக இருக்கிறார். அவர் நேர்மறையான எண்ணங்களுடன் உள்ளார். அவரது கிரிக்கெட் பயணம் எவ்வாறு இருக்கப் போகிறது என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன் என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் மயங்க் யாதவ் இதுவரை 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவர் அடுத்த போட்டியில் விளையாடுவதில் பிரச்னை இருக்காது என லக்னௌ தரப்பில் கூறப்பட்டுள்ளது. லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தனது அடுத்தப் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.