குஜராத் டைட்டன் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கானுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டனஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஷித் கான் 11 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
இந்த நிலையில், கிரிக்கெட்டில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படுவதால் உலகம் முழுவதும் நடைபெறும் டி20 லீக் தொடர்களில் ரஷித் கானை அணியில் வாங்க அனைவரும் ஆர்வமாக இருப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: வழக்கமாக விக்கெட்டுகளை எடுப்பதுபோல் இந்தப் போட்டியில் ரஷித் கான் விக்கெட்டுகள் எடுக்கவில்லை. ஆனால், அணிக்கு தேவை ஏற்பட்டபோது சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுத் தந்தார். இந்த காரணத்தினால் உலகெங்கும் நடைபெறும் டி20 தொடர்களில் தங்கள் அணியில் ரஷித் கான் இருக்க வேண்டும் எனப் பலரும் விரும்புகின்றனர்.
பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என அனைத்துத் துறைகளிலும் அவரது ஈடுபாட்டை பார்ப்பவர்கள், அவர் தங்கள் அணியில் இடம்பெற வேண்டும் என நினைக்கின்றனர். பந்துவீச்சாளர்கள் பாய்ந்து விழுந்து ஃபீல்டிங் செய்தால் தோள்பட்டை காயம் ஏற்பட்டு தங்களது கிரிக்கெட் பயணத்துக்கு ஆபத்தாக அமையலாம் என யோசிக்கலாம். ஆனால், அது மாதிரியான ஃபீல்டிங்கிலும் ரஷித் கான் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார் என்றார்.